Monday, July 11, 2016

வெள்ளையானை- பிரதீப் சுரேஷ்

அன்புடன் ஆசிரியருக்கு

        வெகு நாட்களாக  பதிவு செய்து காத்திருந்து நண்பனின்  சகோதரன்  வெள்ளையானை  வாங்கித்தந்தான். நான் வாங்க முயற்சித்தப் பல இணைய வணிகத்தளங்களில் “கையிருப்பு  இல்லை” என்றே பதில்  கிடைத்தது.

ஒரு நூலினை கையால்  தொடும்  போதே அதனுடன்  நம் உறவு தொடங்கி விடுகிறது  என்று  எண்ண வைத்தது வெள்ளையானையின் அட்டை வடிவமைப்பு. ராமச்சந்திரன்  அவர்களுக்கு  நன்றி. வே.அலெக்ஸ் அவர்களின்  முன்னுரையும்  கச்சிதம். வரலாற்றினை பகுத்தறிந்து பார்ப்பதற்கான ஆளுமை உங்களுள் உருவாவதற்கு  பி.கே.பாலகிருஷ்ணன் உந்துதலாக  இருந்ததை அவர் குறித்த கட்டுரையில் விளக்கியிருந்தீர்கள். அவருக்கே வெள்ளையானை சமர்ப்பணம் செய்யப்பட்டுள்ளது பொருத்தமானது.

இந்திய  வரலாற்றில்  முதன் முறையாக தலித்துகள்  திருப்பி அடிக்கிறார்கள்  என்பது எத்தகைய  உச்ச தருணம்! நம் பொதுச் சமூகம்  அது குறித்து  பேசாமலே என் போன்றவர்களை வளர்த்தெடுத்துவிட்டதால் வெள்ளையானை ஆழமான  தாக்கங்களையும் உணர்வெழுச்சிகளையும் உண்டாக்கியது. இன்றைய தமிழ்  இளைஞர்கள்  ஏய்டன் பைர்ன் ஆக நின்றே அன்றைய மதராசப்பட்டினத்தை புரிந்து கொள்ள முடியும். அஜிதனாக பிங்கலனாக பிரான்சிஸாக எனக்கு ஏய்டன்  தெரிகிறான். தலையில்  அணிந்திருக்கும்  தொப்பி பறந்து விடாமல்  இருக்க பார்மரும் ஏய்டனுமே முயல்கிறார்கள். மேக்கிற்கு அதை பிடிக்க வேண்டிய  அவசியம்  கூட இல்லை. தலைப்பாகையுடன் அறைக்கு வெளியே ஏய்டனை சந்திக்கும்  பக்கிங்ஹாமும் வழுக்கை தலையுடன்  அறையினுள் அவனை சந்திக்கும்  கவர்னரும்  வேறு வேறானவர்கள். ரம்ஜான்  விடுமுறை  என்பதால்  ஒரே நாளில்  படித்து விட முடிந்தது. இன்னும்  பல “ஒரு நாட்களை” வெள்ளையானை  எடுத்துக்  கொள்ளும்  என நினைக்கிறேன்.


வெள்ளையானை சகஜமாக  நெருங்கி  விடக் கூடியதாக  இருந்தது. ஏழாம்  உலகம்  போல முதல்  அத்தியாயமே வெளியே தூக்கி  எறிவதாக இல்லாமல் இருந்தாலும்  திடீரென  ஒரு கணத்தில்  தோன்றியது. நீலமேகத்தை என்ன செய்தும் சவரிராயனைத் தொட வைக்க ஏய்டனால் முடியாது  என்று  முதல் முறை அவன் சொல்லும்  போதே மனம்  ஊகித்து விட்டிருந்தது. மீண்டும்  மீண்டும்  துரைசாமி நாராயணன்  என நிகழ்ந்தேறுவதும் மிகவும்  பழகியதே. இரண்டு வார்த்தைகள்  பேருந்தில்  சகஜமாகப் பேசி விட்டால் மூன்றாவதாக  வந்து  விழும்  கேள்வியாக  எது இன்றும்  இருக்கிறதோ அது தான்  அங்கும்  நிகழ்கிறது. இன்னும் உக்கிரமாக. கண்ணீர்  மட்டுமே  விட வைக்கும் மௌன வலியுடன். காத்தவராயன்  மட்டும்  நம்பிக்கையளிக்கிறான். விலகி நிற்கிறான்.

வெறும் கொடுமைக்காரர்களாக அல்லது  பெருங்கருணை மிக்க புத்திசாலிகளாக மட்டுமே  “வெள்ளையர்கள்” உருவகப் படுத்தப்பட்டிருக்கும் சூழலில்  அவர்களுக்குள்ளாகவே  ஒரு ஜெர்மானியப் பாதிரியாரும் ஒரு ஐரிஷ்  இளைஞனும்  எப்படி  அணுகப்படுகிறார்கள் என சொல்லிச் செல்கிறது  வெள்ளையானை.

பறை சேரியில்  பனை நுங்கினை உறிஞ்சிய பின் ஏய்டன் அந்தக் கிழவியை தாயென என்னும்  போது நெஞ்சு  ஏனோ விம்மியது. பின் அது தவறோ என்ற குற்றவுணர்வும் மேலிட்டது. ஏகாதிபத்தியமும் அரசு நிர்வாகமும்  செயல்படும் விதத்தை மரிஸாவுக்கு விளக்கும் போது ஏய்டன்  உச்சத்துக்கு  சென்றாலும்  சக மனிதனின்  முதுகில்  கால் வைத்திறங்க கூசியழும் மரிஸா அக்கணமே உயர்ந்தெழுகிறாள். ஏய்டனின் பிம்பம்  அவளுள்  அக்கணம்  உடைகிறது.
பல இடங்கள் உறைந்து நிற்க வைத்துவிட்டன. செங்கல்பட்டில்  பசித்து சாகும்  குழந்தை  கடவுளுக்கு  என்ன கணக்கு? என ஏய்டன்  யோசிக்கும்  தருணம் அப்படியொன்று. பிரண்ணன் அறிந்த நிதானத்துடன்  பேசுகிறார். ஏய்டன்  கொதித்துக்  கொண்டே இருக்கிறான். ஏய்டன் சாலையில்  சந்தித்து  மறையும்  ஆண்ட்ரூ  மனசாட்சியின்  காத்திரமான  குரலாய் செவிகளில்  அறைகிறான்.

“சாவதற்கு  நாங்கள்  எப்போது  வாழ்ந்தோம்?” என காத்தவராயன்  கேட்பது இப்போது  வரை செவிகளில்  ஒலித்துக்  கொண்டே இருக்கிறது. தான்  உட்பட யாரையும்  மிச்சம் வைக்காமல்  குற்றவாளிக் கூண்டில்  ஏற்றுகிறான் காத்தவராயன். ஆனால்  அவனும்  தன் தலைப்பாகையுடனே வருகிறான். அவனுக்கு  தலைப்பாகை சுமையோ குறியீடோ அல்ல. அது அவனுடைய  மீறல்  அறைகூவல். மொழியற்றவர்களாக அவர்களை விட்டிருப்பது  இன்னும்  நிம்மதியிழக்கச் செய்கிறது. “தொர தொர” என்பதைத் தாண்டி  அங்கு தமிழும்  ஒலிக்கவில்லை.
கோடிக்கணக்கில் இந்தியர்கள் பெரும்பாலும்  தலித்துகள்  இறந்த பெரும் பஞ்சம் இந்தியர்களின்  தீவிரமான  சிக்கலான சாதியடுக்கு முறைகள் பஞ்சத்தைப் “போக்க” அரசு மேற்கொள்ளும் “கட்டுமான” நடவடிக்கைகள்  என நடுங்கவும் சோர்வுறவும் செய்யும்  சதுரங்கத்தில் அலைகழிக்கப்பட்டு குழம்புகிறான் ஏய்டன். எதிர்பார்ப்பும்  கசப்பும்  அவநம்பிக்கையுமாக ஏய்டன்  நின்று கொண்டிருக்கும் போது எழும் கருப்பனின்  குரல்  இந்தியாவின்  இருண்ட  மூலைகளிலிருந்து  திரண்டு வரும் முழக்கமாகிறது. உயர் குடிகளை குளிர்விக்க வந்த தொழிற்சாலையிலிருந்து எழுகிறது எரிந்து  கொண்டிருப்பவர்களின் முதல்  குரல். ஏய்டன்  உட்பட அனைவரையும்  அச்சத்தில்  ஆழ்த்துகிறது  அக்குரல். ஆனால்  அதன் பிறகு  நடக்கும்  காய் நகர்த்தல்கள் மனதினை அதிர்வடையச் செய்யாததே அதில்  எவ்வளவு  பழகி விட்டோம் என சோர்வேற்படுத்தியது.

பெரும்  கனவிலிருந்து கைப்பிடி நிஜத்தைக் கூட அள்ளிவிட முடியாத நிலையில்  கதறுகிறான் ஏய்டன். முரஹரி அய்யங்காரிடம் காத்தவராயன் பேசும் வார்த்தைகளை ஏனோ திரும்பப் படிக்கத் தோன்றியது. மரிஸா அவனை திருப்பி அடிக்கிறாள். அவன் அலுவலகம்  அவனை பகைக்கிறது. சாக்கடை நீராக மனிதர்கள்  ஓடும்  தெருவில்  தன் “மீட்பரை” கண்டு கொள்கிறான்  ஏய்டன்.

ஒளி நிறைந்த கண்ணுடன் ஒரு கொடுமையை கண்டு நிற்கும்  முரஹரி  அய்யங்காரைக் கண்டதும்  தன் வைணவ அடையாளத்தை  துறந்து பனை நுங்கு கொடுத்த கிழவியின் “புண்ணியத்தை” சூடிக் கொள்கிறான் காத்தவராயன். விஷ்ணுவை முரஹரி  அய்யங்காருடன் ஒப்பிடுவது சில்லிட வைக்கிறது.விவாதங்கள் வழியே புரிந்து கொள்ள வேண்டிய பல கூர்மையான வெளிப்பாடுகள்  வெள்ளையானையில் உள்ளன. ஏய்டனைப் போலவே தான் இன்றைய இளைஞர்களாகிய நாங்களும். பேருந்து விரைவாகச் செல்லும்  வரையே நாங்கள்  இந்தியாவைக் கண்டிருக்கிறோம். வெள்ளையானை  ஒற்றைப்  படையாக புரிந்து வகுத்துக் கொள்ளவே முடியாத பல நுண்மையான  உரையாடல்களால் நிறைந்துள்ளது. படைப்பாளியை  குறித்து ஒரு மனச் சித்திரத்தை உருவாக்கிக் கொண்ட பின் அணுகப்படும் படைப்புகள்  மேலு‌ம்  அணுக்கமாகி விடுகின்றன போலும். Jeyamohan.in  வலைதளத்தில்  வெள்ளையானை குறித்தும்  இந்திய  சாதிகள் குறித்தும்  நிகழ்ந்த விவாதங்களை ஓரளவு படித்திருந்ததால் ஒரு  விரிந்த பிண்ணனியோடு வெள்ளையானையை அணுக முடிந்தது. அனைத்திற்கும்  மேலாக  ஒரு கூர்மையான சமரசமற்ற நீதியுணர்ச்சி வெள்ளையானையில் வெளிப்படுகிறது. ஏய்டன்  சுட்டுக் கொள்வதும் பார்மர் கலங்குவதும் காத்தவராயன்  தன் அடையாளத்தை அழிப்பதும்  மரிஸா அழுவதும்  அதனால்தான். அவ்வுணர்ச்சி நீடிக்கும்  வரை நாம் கைவிடப்படவில்லை என நம்ப முடிகிறது.

குளிர்ந்த மத்தகம் தாழ்த்தி முட்ட வருகிறது இந்திரனின்  வாகனமென எண்ணச் செய்கிறது எமர்சனின் சிந்தனையாகவும் ஒளி பெறுகிறது  வெள்ளையானை.

கை நிற்கவில்லை

மறு வாசிப்பிற்கு பின் மீண்டும்  எழுதலாம்  என நிறுத்துகிறேன்.

நன்றி
அன்புடன்
சுரேஷ் ப்ரதீப்

Saturday, January 9, 2016

முரளி,செல்வராஜ்- விமர்சனம்

 1


சென்னையில் மழை - வார்த்தைகளில் விவரிக்க முடியாத தளத்தில் எல்லோரையும் பாதித்த நிகழ்வு.. ஒரு தளத்தில் பெருங்கருணை. பெரும்செல்வம் - மழை . நாம் தயார் நிலையில் இல்லாததால், அந்த நிகழ்வே ஒரு இயற்கை பேரழிவு என்கிற உருக்கொண்டது.
வீட்டினுள் மழை நீர். மின்சாரம் இல்லாததால் - முகர்ந்து வெளியேற்ற வேண்டும். கடைசியில், துணியில் நனைத்து பிழிந்து என. மீண்டும் மீண்டும் இதனை செய்ய வேண்டும். ஈரத்தில் உலாவல்.வீட்டில் கீழே சமையல் செய்து விட்டு, மாடிக்கு சென்று விட்டோம். அருகில் இருந்த ஓரிரு குடும்பங்கள் எங்களுடன் தங்கின. எதோ ஒரு மானுட நெருக்கம் மெல்ல நிகழ்ந்தது.
நான்கு நாட்கள் ஆன பின்பு - ஒருபுறம் அச்சம். குழந்தைகள் கேள்விகள் - மழை எப்போது நிற்கும்? - தண்ணீர் வீட்டில் இன்னும் ஏறுமா? என்கிற கேள்விகளுக்கு சுமாரான பதில்கள் கூட இல்லாத நிலையில், மறுபுறம், இப்படியே வாழ கற்றுக் கொள்ள தாயராக வேண்டுமோ என்கிற எண்ணம் - ஜப்பானிய திரைப் படத்தை நினைவூட்டியது. மணல் குழியில் ஒரு பெண் - http://www.imdb.com/title/tt0058625/

சென்னை மக்கள் பலர் ஆழமாக பாதிக்கப் பட்ட நிலையினில், எங்கள் நிலை பரவாயில்லை என்பது, மன சோகத்தை அதிகமாக்கியது. எங்களில் சிலர் மணப்பாக்கம் அருகில் உள்ள கூவமருகே உள்ள குடி இருப்புகளுக்கு உணவு கொண்டு சென்றோம். முக்கிய சாலைகளுக்கு உள்ளே இருப்பன. எவரும் செல்லவில்லை என்று அறிந்தோம். சூழ்நிலையும் இருப்பும் மனதை உணர்வற செய்தன.

நாம் தயார் நிலைக்கு இருக்க வேண்டியதையும், நாம் செய்ய வேண்டியதையும் மிக அவசர நிலையில் உணர்த்தின.
நேரம் நிறைய கிடைத்த தருணத்தில் புதுமை பித்தன் கதைகள். கடந்து செல்ல அரிய எழுத்தாளர் - புதுமை பித்தன். வெள்ளை யானை - மீண்டும் படித்தேன்.
வெள்ளை யானைக்குள் பல தளங்கள் இருப்பதை கண்டேன். அமெரிக்க வணிகமும் பிரிட்டனின் உலகமயமாதலின் கருவை கண்டது போல. நியூ இங்கிலாந்தின் பனிக் கட்டிகள் உலகமெங்கும் பிரயாணித்த கதை - வெள்ளை யானையை தொடர்ந்த போது கண்டு கொண்டேன். ஒரு சில துல்லியமான தகவல்கள் - ஆச்சரியமாக விரிந்தன. எப்படி அந்த பெரும் பனிக்கட்டிகளை உலகெங்கும் வியாபாரம் செய்தனர்? கொண்டு சென்றனர் - இவை அனைத்தும் நடந்தது - இங்கா? மைலாப்பூரிலா? ஐஸ் ஹௌசிலா? - என்பது ஒருபுறம். நமது நகரை போலவே - மற்ற உலக நகரங்களிலும் - கடுமையான உடல் பணி செய்தவர்களை மையாமாக கொண்ட நிறுவனங்கள் - அவர்களின் உழைப்பை ஒரு புறம் குறைத்து மதிப்பிட்டு - உழைப்பாளர்களுக்கு. மறு புறம் அதனை அதிக மதிப்பிட்டு - மற்ற நிறுவனங்களிடம். மெல்ல தற்போதுள்ள நிறுவனங்களின் அணுகு முறையின் கரு - பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடர்ச்சி.

பிறகு திடீரென இந்த வியாபாரம் சரிந்தது. அதன் சரிவு முனை (tipping point) என்னவென்று ஆராயலாம்.

ஆனால் மனதை நிலை கொள்ளாமல் ஒரு துயரில் ஆழ்த்தியது. பஞ்சம். 'தொர.. தொர ' என்ற குரல் கனவிலும் வந்தது.மீள முடியவில்லை :(. எல்லா கதா பாத்திரங்களும் ஆழ்ந்து சிந்திக்கின்றன. சூழலோடு இணைகின்றன. மெல்லிய எதிர்ப்பை ஆழமாக தெரிவிக்கின்றனர். இது அதிகம் படிக்கப் பட வேண்டிய நாவலோ என தோன்றுகிறது. ஊடகத்தில் (நான் கண்ட வரை), இது தலித் நாவலாக சித்தரிக்கப் படுகிறது. அது இந்த நாவலின் மதிப்பை சற்று குறைப்பது போல தோன்றுகிறது. இதில் நீங்கள் சொல்லாமல் விட்ட இடங்கள் பல. அவை அனைத்தும் விரியலாம். அந்த விதத்திலும் ஒரு நுண் கட்டமைப்பு கொண்ட நாவல் என்று கருதுகிறேன்.
முரளி

அன்புள்ள ஜெ


வெள்ளையானை நீண்ட இடைவேளைக்குப்பின் இப்போதுதான் வாசித்தேன். ‘பஞ்சமோ பஞ்சம் என்று சாகின்றனரே’ என்று பாரதி பதைபதைத்து எழுதிய வரிகளை நினைத்தேன். அத்தனை பெரிய பஞ்சத்திற்கு பொறுப்பான வெள்ளைய ஆட்சியை இன்றைக்கும்கூட விதந்தோதும் ஒரு கூட்டம் நம்மிடம் உள்ளது. அந்தப்பஞ்சத்தைக் கண்டு பாரதி ‘நம் மடாதிபதிகள் வயிறு வளர்க்கிறார்கள்’ என்று எழுதினார். விவேகானந்தர் குமுறி எழுதினார். அந்த நிலைமையும் நீடிக்கத்தான் செய்கிறது
.
அந்த ஆட்சியின் குரூரம் நம்முடைய மொண்ணைத்தனம் மட்டுமல்லாமல் அதை எதிர்கொள்ளும் கதாநாயகனின் கையாலாகாத தனமும் நாவலில் உள்ளது. அதுவும் ஐரிஷ் விடுதலை இயக்கத்தின் கையாலாகத்தனமாகவே தெரிகிறது. வரலாற்றை இப்படிச் சுருக்கிப்பார்ப்பது ஒரு அற்புதமான அனுபவம். இந்நாவலுக்கு இனிமேல்தான் ஒரு நல்ல வாசிப்போ விமர்சனக்கட்டுரையோ வரவேண்டும் என்று தோன்றுகிறது
.
இதன் நுட்பங்களை வாசித்துக்கொண்டே இருக்கிறேன். ஷெல்லி பிரிட்டனில் நடந்த குதிரைத்தாக்குதலை கண்டு கொதித்து எழுதிய கவிதையை மிக நுட்பமாக கையாண்டிருக்கிறீர்கள். அந்தக்கவிதையைச் சொல்லும் கறுப்பன் வரும் காட்சி மெய்சிலிர்க்கவைப்பது. நாவல் முழுக்க வரும் பிரிட்டிஷ் கவிதைகள் ஒவ்வொன்றும் மிக உக்கிரமான மனநிலையில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. அவை உங்களுக்கு நினைவுக்கு வந்த வகையில் உள்ளன என நினைக்கிறேன். ஒருபக்கம் ஷெல்லியின் ஹ்யூமனிஸம் என்றால் மறுபக்கம் பைரனின் மனிதமறுப்புத்தத்துவம். இரண்டும் மாறிமாறி வருகிறது

பிரிட்டிஷ்கவிதை என்பது மனிதநாகரீகம் அடைந்த ஒரு பெரிய உச்சம். அதில் சந்தேகமே இல்லை. ஆனால் அந்த நாகரீகம்தான் இந்தியாவில் நாலில் ஒருபங்கினரைக் கொன்றது. இந்த முரன்பாட்டை அந்தக்கவிதைகள் சொல்லிக்கொண்டே இருக்கின்றன. எந்த பனிக்கட்டி வெள்ளையானையாக மக்களைக் கொல்கிறதோ அதே பனிக்கட்டிதான் சுதந்திரத்தின் கொடியடையாளமாகிய வால்டனில் இருந்து வந்தது. இந்த சிக்கலைச் சொல்லுவதுதான் வெள்ளையானையின் வெற்றி
கெ.ஆர்.செல்வராஜ்


வெள்ளையானை விமர்சனங்கள் அனைத்தும்

Wednesday, April 22, 2015

வெள்ளையானையும் மீட்கப்பட்டசெல்வமும்

மரியாதைக்குரிய ஜெயமோகன் அவர்களுக்கு,

நலமாக இருப்பீர்கள் என நம்புகிறேன். கடந்த வருட இறுதியில் வெள்ளையானை படித்ததும் அதன் தொடர்ச்சியாய் சிங்கை நூலகத்தில் திரு. ராயின் The Great hedge of India படித்தேன். வரலாறு என்பது நான் இதுவரை படித்தது அல்ல. எந்த உண்மையும் அவ்வளவு எளிதில் நம் கவனத்திற்கு வருவதில்லை என ஏக்கமாக இருந்தது. எம்.என். ராய், கோஸாம்பி, ராமச்சந்திர குகா புத்தகங்களுடன் Mark Lindley, எழுதிய J.C. Kumarappa: Mahatma Gandhi’s Economist ஆகியவற்றை வாசிக்கத் தொடங்கியுள்ளேன்.

பொருத்தமான நேரத்தில் “1942 ஆம் ஆண்டு மும்பையிலிருந்து இங்கிலாந்திற்கு 50 மில்லியன் மதிப்புள்ள வெள்ளி நாணயங்களை ஏற்றிச் செல்லும்போது கடலில் மூழ்கிய கப்பல் மீட்கப்பட்டது” என்ற செய்தியும் வெளியாகியுள்ளது. பெரிய விவாதமாக இது மாறும் என எதிர்பார்த்தேன் அப்படி எதுவும் நடக்கவில்லை. நடந்தால்தான் ஆச்சரியம். உங்களோடு பகிர்ந்து கொள்ளவிரும்புகிறேன்.

மீட்கப்பட்ட ஒவ்வொரு நாணயமும் நம் மூதாதையரின் குருதி அல்லவா? இதுபோல இரு நூற்றாண்டிற்கும் மேலான ஆங்கிலேய ஆட்சியில் எத்தனை கப்பல்களில் நமது செல்வம் கடத்தப்பட்டிருக்கும் என நினைக்கும்போது வருத்தமாயிருக்கிறது.

தொடர்புடைய பத்திரிகைச் செய்தி: http://www.telegraph.co.uk/news/worldnews/africaandindianocean/sainthelena/11536661/British-salvage-boat-recovers-treasure-from-wreck-of-SS-City-of-Cairo.html
http://edition.cnn.com/2015/04/15/europe/world-war-ii-shipwreck-silver-recovered/
அன்புடன்,
BALA.R
சிங்கப்பூர்.

அன்புள்ள பாலா

பொதுவாக இந்த ‘நம் செல்வம் கொள்ளை போனது’ என்பதில் எனக்கு முழுமையான உடன்பாடு இல்லை. கொள்ளைபோனது உண்மை. அது நமது சொந்த இழிவினால் என்பதும் உண்மை

ஆனால் சென்ற காலகட்டத்தில் இங்கே நிகழ்ந்தது என்ன? அடிமட்டத்தில் இருந்து சுரண்டப்பட்டு செல்வம் அரசுகளாக குவிக்கப்பட்டது. அரசுகள் போரிட்டுக்கொள்ள அந்தச் செல்வம் அழிந்துகொண்டே இருந்தது. எத்தனை நகரங்கள் மீண்டும் மீண்டும் கொளுத்தப்பட்டன. எத்தனை கோட்டைகள் அழிககப்பட்டன!

இந்த பெரும் செல்வம் இரு பெருநகரங்களாக ஆகி இங்கேயே இரண்டு ஆட்சியாளர்கள் போரிட்டுக்கொண்டதனால் முழுமையாக அழிந்தால் பரவாயில்லை என்று சொல்லமுடியுமா என்ன?

ஜெ

Friday, April 10, 2015

வெள்ளையானையும் வரலாறும்

<a href="http://www.jeyamohan.in/wp-content/uploads/2015/04/vellai-yanai.jpg"><img src="http://www.jeyamohan.in/wp-content/uploads/2015/04/vellai-yanai.jpg" alt="vellai-yanai" width="1024" height="768" class="aligncenter size-full wp-image-74036" /></a>

Dear Mr. Jeyamohan,
Greetings!

This is my first mail to you though I have discussed many times the quality of your creative works with my friend Prof. Bernard Chandra.

I fully agree with whatever you have written about Jeyakanthan as a writer in The Hindu (Tamil) today. As you have said, there is a synthesis of Marxism and Gandhian philosophy. Though it manifested forcefully in his later works, it was always there. Jeyakanthan is one of the writers who do not show a gap between what they write and how they live.

Your assessment of modern Tamil literature is very true. Bharathi’s greatest achievement is his intention to become a poet-prophet. It was natural. Having chosen the pen name “Shelley Thaasan” he acquired the spirit of Shelley. Both were like Prometheus.

I am yet to complete a critical essay on your novel வெள்ளை யானை, though I have presented lectures on the novel in National Seminars in our college and also at Teresian College, Mysore. I analysed the novel from postcolonial perspective. I was happy that you have provided an opportunity to the readers to realize the subjectivity of history. As New Historicists like Stephen Greenblatt and Louis Montrose say, history is cultural and is connected to power.

வெள்ளை யானை establishes that there never was and there never is a single history or a single worldview. When I was reading வெள்ளை யானை, I just thought of Amitav Ghosh’s Sea of Poppies and River of Smoke. While Amitav Ghosh’s novels focus on the Opium Trade, வெள்ளை யானை deals with the predicament of the marginalised people. While Ghosh’s novels have the technique of parallel plots, வெள்ளை யானை becomes more emotional and complex.

Thank you.

Dr. V. S. Joseph Albert
Deputy Principal & Associate Professor of English
St. Xavier’s College



மதிப்பிற்குரிய ஜோசஃப் ஆல்பர்ட் அவர்களுக்கு,

பெர்னாட் சந்திரா வழியாக உங்களை அறிவேன். நலமாக இருக்கிறீர்கள் அல்லவா?

வரலாறு என்பது கண்டிபபக புறவயத்தன்மை [objectivity]  நோக்கிச் செல்லவேண்டியது. அப்போதுதான் அதற்கு மதிப்பு. ஆனால் அப்படிச்செல்வதனாலேயே அது இழந்துவிடும் சில அம்சங்கள் உண்டு. அதை மானுட உணர்ச்சிகள், ஆன்மீகம் என்று நான் சொல்வேன். அவையிரண்டையும் வரலாற்றில் இணைப்பதே இலக்கியத்தின் பணியாக இருக்கமுடியும்.

எப்படிப்பார்த்தாலும் இலக்கியம் வரலாற்றுக்கு ஒரு மேலதிக இணைவுதான். ஆகவே வரலாறு எப்படி எழுதப்படிருக்கிறதோ அதற்கு மாறாகவே இலக்கியம் அமையமுடியும். வரலாறு ஒற்றைப்படையாக , உணர்ச்சிகரமாக எழுதப்பட்டிருந்தால் புனைவு விரிந்து பலசரடுகளாக மாறும். கறாரான சித்தரிப்பாக ஆகும்.

மாறாக  பஞ்சத்தின் வரலாறோ பலபல சரடுகளாக பிரிட்டிஷாராலேயே மாற்றப்பட்டு உண்மையை விட்டு விலகிச்சென்றது. ஆகவே ஒற்றை அம்புபோல, உணர்ச்சிகரமாக அது அமையவேண்டுமெனத் தோன்றியது. முழுக்கமுழுக்கக் குறியீடுகள் வழியாக நாவலைக் கொண்டுபோனதும் ஓரிரு நாட்களுக்குள் கதை நிகழ்ந்து முடியும்விதமாக அதை அமைத்ததும் அதனால்தான்.

ஜெ


<a href="http://vellaiyanainovel.blogspot.in/">வெள்ளை யானை- அனைத்து விமர்சனங்களும்</a>

Tuesday, October 28, 2014

அறக் காய்ச்சல் முற்றுகையில் பிறழும் கலை மனம்-பி.ஆர். மகாதேவன்

முரஹரி ஐயங்கார் என்றொரு கதாபாத்திரம் இந்த நாவலில் வருகிறது. வக்கீல் தொழிலுக்குப் படித்திருக்கும் அவர் பிரிட்டிஷாருக்கு நிதி ஆலோசனைகள் வழங்கும் ஆடிட்டராகவும் இருக்கிறார். பஞ்ச காலத்தில் லட்சக்கணக்கில் தலித்கள் செத்து விழுவதை அவர்களுடைய விதி என்று எள்ளி நகையாடுகிறார்.  கூடவே பிரிட்டிஷாருக்குக் கூட்டிக் கொடுத்தும் தனது செல்வாக்கைப் பலப்படுத்திக்கொள்கிறார் என்று நாவலில் சொல்லப்படுகிறது. அப்படி ஒருவர் இருந்தாரா… அவர் அதைச் செய்தாரா என்பவையெல்லாம் நிரூபிக்க முடியாத புனைவு உண்மைகள். ’பெரியார் மண்’ணில் சுமார் 20-25 ஆண்டுகளுக்கு மேலாகத் தனியொருநபராக, இந்து ஆன்மிக மரபின் இலக்கிய ஆதரவாளராக வீரியத்துடன் செயல்பட்டுவரும் ஜெயமோகனே இதையும் செய்திருப்பதைப் பார்க்கும்போது வேதனையே மிஞ்சுகிறது.
தலித்கள் இந்து சாதியமைப்பில் கூடுதல் துன்பங்களை அனுபவித்த பிரிவினர் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அந்தவகையில் சாதி இந்துக்கள் அனைவருமே குற்றம்சாட்டப்படவேண்டியவர்களே.  ஆனால், பிரிட்டிஷாருக்கு முந்தைய காலகட்டத்துக் கொடுமைகளுக்கு மட்டுமல்லாமல் பிரிட்டிஷாரின் காலகட்டத்தில் நடந்தவற்றுக்கும் சாதி இந்துக்களே காரணம் என்று சித்திரித்திருப்பது மிகப் பெரிய வரலாற்று மோசடியே. முரஹரி ஐய்யங்கார் என்ற அந்த ஒற்றைப் பிரதிநிதியின் வார்த்தைகளை ஒட்டுமொத்த இந்து சமூகத்தின் குரலாக முன்வைப்பது அநியாயம்.

வெள்ளை யானை, ஜெயமோகன், எழுத்து வெளியீடு, ரூ 400, பக்கம் 408.
உண்மையில் இப்படியான சிந்தனைக்கு அடிப்படையான காரணம் சாதி பற்றிய பிழையான புரிதலே.  தொழில் புரட்சி ஏற்பட்ட பிறகு உலகம் முழுவதும் முகிழ்த்தெழுந்த சமத்துவ சமூக அமைப்பை இந்தியாவிலும் கொண்டுவர பிரிட்டிஷார் காலத்தில் முயற்சிகள் எடுக்கப்பட்டன. உலகின் பிற பகுதிகளில் கறுப்பர் வெளுப்பர், ஜெர்மானியர் யூதர் என இரட்டை அடுக்கே பிரதானமாக இருந்தது. அதாவது ஒடுக்கப்பட்ட பிரிவினரும் கணிசமான எண்ணிக்கையில் ஓரணியில் இருந்தனர்.  நவீன மக்களாட்சி உலகில் அந்த எண்ணிக்கைக்கு மிகுந்த முக்கியத்துவம் உண்டு. அதுவே சமத்துவ நடவடிக்கைகள் எடுக்கப்பட்டபோது எதிர்பார்க்கும் பலன் கிடைக்க வழிவகுத்தன. அதோடு இனவெறி, நிற வெறி, மத வெறி போன்றவையெல்லாம் படு கொடூரமாக இருந்தன. எனவே, அவற்றுக்கு எதிரான குற்ற உணர்ச்சியும் மிக அதிகமாக இருந்தன. மேலும் மேற்குலகில் இயற்கை வளங்கள் அதிகம் மக்கள்தொகை குறைவு. அதோடு அவர்கள் காலனியாக்கல் மூலம் உலகின் வளங்கள் அனைத்தையும் கொள்ளையடிக்கவும் செய்தனர். எனவே, அந்த பகுதிகளில் சமத்துவத்தைக் கொண்டுவருவது எளிதாக இருந்தது. அதாவது அந்த நாட்டு மேல் அடுக்கினர் உலகின் உச்சிக்குச் சென்றனர். எனவே அங்கிருந்த கீழடுக்கினர் பிறபகுதிகளைவிட ஒப்பீட்டளவில் மேலான நிலைக்கு உயர்ந்தனர்.  இந்தியாவில் நிலைமை முற்றிலும் வேறானது. இங்கு இரட்டை அடுக்கு முறை இருந்திருக்கவில்லை. மையம் அழிக்கப்பட்ட அமைப்பு என்பதால் ஒடுக்குமுறை கொடூரமானதான இருந்திருக்கவில்லை. சமத்துவம் இருந்திருக்கவில்லை, ஆனால் சந்தோஷமான வாழ்க்கைக்கான வெளி அனைத்து சாதிகளுக்கும் இருந்தது. இயற்கை வளங்கள் குறைவு. மக்கள் தொகை அதிகம். இது போன்ற காரணங்களால் இங்கு சமத்துவத்தைக் கொண்டுவர முன்னெடுக்கப்பட்ட முயற்சிகள் கடைநிலை சாதிகளை இடைநிலை சாதிகளோடு மோதவைத்துவிட்டன. இந்தக் காலகட்டத்தில் நடந்த வன்முறைகளை அடிப்படையாக வைத்து முந்தைய கால சாதிய சமூகத்தையும் அதே அளவுக்குக் கொடூரமானதாகச் சொல்லி இந்துப் பாரம்பரியத்தை முற்றாக நிராகரிக்கும் முடிவுக்கே அனைவரும் செல்கிறார்கள். உண்மையில் நோய்க்குத் தரப்பட்ட மருந்தினால்தான் (அதுவும்கூடத் தரப்பட்ட விதத்தில்தான்) நோய் முற்றியிருக்கிறது.  தவறு மருந்தைத் தந்த விதத்தில்தான் இருக்கிறதே தவிர நோய் அவ்வளவு கொடியது அல்ல.
இந்திய சாதி அமைப்பு மேற்கத்திய சமூகத்தைவிட அனைத்து அம்சங்களிலும் மேலானதாக இருந்திருக்கிறது என்பதுதான் இஸ்லாமிய ஆட்சிகாலத்திலும் அதற்கு முன்பாகவும் இங்கு வந்த பயணிகள், ஆய்வாளர்கள், மத போதகர்கள் ஆகியோரின் (இந்தியாவில் ஆட்சியைக் கைப்பற்றும் எண்ணம் உருவாகியிராத ஆரம்பகால கட்டத்தில் வந்தவர்கள்) ஆவணங்களில் இருந்தும் தெரியவந்திருக்கிறது. மேற்கத்திய உழைக்கும் வர்க்கத்தின் கூலியைவிட இந்திய உழைக்கும் வர்க்கத்தின் கூலி அதிகமாக இருந்தது என்பதுதான் அந்த ஆவணங்களில் இருந்து தெரியவரும் உண்மை. மேலும் இந்திய ஆன்மிக மரபும் துறவியர் பாரம்பரியமும் சாதி சார்ந்த ஏற்றத்தாழ்வுகளில் இருந்து பெருமளவுக்கு விலகியதாகவே இருந்துவந்திருக்கிறது. இந்த விஷயங்களில் பெரும்பாலானவை ஜெயமோகன் வழியாகத்தான் தமிழ் வாசகப்பரப்பில் பதிவுசெய்யவும் பட்டிருக்கின்றன. ஆனால், இந்த நாவல் இந்த அம்சங்களை முற்றாகப் புறக்கணித்துவிட்டுப் புதிய சித்திரத்தைத் தீட்டியிருக்கிறது.
இந்து சாதி அமைப்பு மீதான இந்த மிகையான வெறுப்புதான் கடந்த காலத்தை நரகமாகச் சித்திரிக்கத் தூண்டுகிறது. இந்த சிந்தனைத் திருகலைச் சரி செய்யாமல் உருவாகும் எந்தவொரு படைப்பும் இந்து சமூகத்தின் அசல் பிரதிபலிப்பாக இருக்க வாய்ப்பில்லை.
இன்று இந்த முத்திரையை அழிப்பது சாத்தியமும் இல்லை.  அது நதியை எதிர்த்திசையில் பாய வைப்பதைப்போன்றது.  தலித், சூத்திர இண்டலெக்சுவல்களில் ஆரம்பித்து முற்போக்காளர்கள், கிறிஸ்தவ, இஸ்லாமிய அறிவுஜீவிகள், நவீன/மேற்கத்திய மோஸ்தரில் திரியும் அக்ரஹாரத்து அம்பிகள்வரை அனைவருமே சாதிதான் உலகத்திலேயே கொடிய சமூக அமைப்பு என்றும் அதற்கு சாஸ்திர/இந்து மத அங்கீகாரம் உண்டென்றும் சொல்பவர்களாகவே இருக்கிறார்கள் (பிரிட்டிஷ் கிறிஸ்தவரும் ஐரோப்பிய கிறிஸ்தவரும் அமெரிக்க கிறிஸ்தவரும் என்ன செய்தாலும் அது அவர்களுடைய மதத்தின் தூண்டுதலாகப் பார்க்கப்படாது. அதை அவர்கள் வெளிப்படையாக அறிவித்த நிலையிலும். இந்து செய்பவை மட்டுமே இந்து மதத்தின் அங்கீகாரத்தால் செய்யப்படுபவையாக முத்திரை குத்தப்படும்.) போதாதகுறையாக கருத்தியலில் ஆரம்பித்து காசு இயல் வரை மேற்கத்திய பின்னூட்டமும் இதற்கு உண்டு. என்ன… இந்த சாதி அமைப்பால் பாதிக்கப்பட்டதாகச் சொல்லப்படும் மக்களுக்கு மட்டும் இந்த உண்மைகள் தெரியாது! ஒரு கலைஞனின் காலடிகள் பட வேண்டிய உலகம் அதுவே.
சாதி அமைப்புக்கு அதில் பாதிக்கப்படும் மக்களிடமிருந்து எந்தப் பெரிய எதிர்ப்பும் வராமல் இருப்பதற்கு அது அவ்வளவு தந்திரமாக இருப்பதுதான் காரணம் என்ற ஒற்றை வாதத்தின் மூலம் தமது சிந்தனைக்கு எந்த பாதிப்பும் வராமல் முழங்கிக்கொண்டு வருகிறார்கள். இந்து சாதி அமைப்பை நிதானமாக அணுகும் ஜெயமோகன்கூட இந்த நாவலில் வெகுவாகத் தடம் புரண்டிருக்கிறார். ’பிரிட்டிஷாரால் உருவாக்கப்பட்ட செயற்கைப் பஞ்சத்தில் லட்சக்கணக்கான தலித்கள் இறந்த நேரத்தில், அவர்கள் எல்லாம் செத்து ஒழிய வேண்டியவர்களே… அது அவர்களுடைய விதி, முன்வினைப் பயன். மேலும் பிராமணனாகிய தனக்கு சமமாக நின்று பேசிய குற்றத்துக்காக அவனுடைய சாதியினர் புழுக்களைப் போல் துடித்துச் சாகத்தான் வேண்டுமென்று’ முரஹரி ஐயங்கார் ஆவேசப்படுவதாக கதை புனையப்பட்டுள்ளது. இது ஏதோ தனி ஒரு நபரின் குரலாக அல்ல, ஒட்டு மொத்த இந்து சமூகமுமே அப்படியான மனநிலையில் இருந்து தலித்களைக் கைவிட்டதாகவே சொல்லப்படுகிறது. இத்தனைக்கும் முற்பிறவி, கர்ம வினைக் கோட்பாடு எல்லாம் பவுத்த சமணத்தின் ஆதாரக் கோட்பாடுகள்தான். பிராமணர் ஒருவர் அந்தக் கோட்பாட்டின் ஆன்மிக தளத்தைப் புரிந்துகொள்ளாமல், அதை சமூக ஏற்றத் தாழ்வுகளையும் பேரழிவுகளையும் நியாயப்படுத்தப் பயன்படுத்திக்கொண்டதாகக் குறிப்பிட்டிருப்பது மிகவும் தவறு. கிறிஸ்தவம் பற்றிப் பேசும்போது சர்ச்களின் அரசியலையும் உண்மையான கிறிஸ்தவ ஆன்மிகத்தையும் பிரித்துப் பார்த்து அவற்றுக்கு உரிய பிரதிநிதித்துவத்தை நாவலில் வழங்கியிருக்கும் ஜெயமோகன் இந்து மதத்தில் அரசியல் சக்திகள் மட்டுமே இருப்பதாகச் சித்திரித்திருப்பது ஏனென்றே தெரியவில்லை. முரஹரி ஐயங்காரின் கொடூரமான வாதத்துக்கு நிகராக ’வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வடினேன்’ என்ற இந்து ஆன்மிகக் குரலும் உரத்து ஒலித்த பூமிதானே இது. இந்த நாவலில் ஒரு கிறிஸ்தவ மத போதகர் பஞ்சத்தின் கொடுமையைக் கண்டு மனம் பொறுக்காமல் தன் கையில் இருக்கும் சொற்ப உணவை எடுத்துக்கொண்டு அவர்கள் மத்தியில் ஆவேசத்துடன் பாய்ந்ததாகச் சொல்லப்பட்டிருக்கிறது. உண்மையில் இது போன்ற பஞ்சத்தை மதம் மாற்றக்கிடைத்த நல்ல வாய்ப்பு என்றுதான் சர்ச் நினைத்திருக்கிறது. எனினும் அவர்களில் இருந்த எளிய அர்ப்பண உணர்வு கொண்ட பாதிரிகளை புனைவின் துணைகொண்டு உருவாக்கியிருக்கும் ஜெயமோகன், இந்து ஆன்மிக சக்தியை முற்றாகப் புறக்கணித்ததேன்? எதை எழுதுவது எதைவிடுவது என்பதெல்லாம் எழுத்தாளனின் புனைவு சுதந்திரத்துக்கு உட்பட்டது என்ற பதில் இந்த இடத்தில் செல்லுபடியாகாது. கிறிஸ்தவத்தில் இருக்கும் சொற்ப நல் மனசைத் தோண்டி எடுத்து பாலிஷ் போட்டுக் காட்டும் ஜெயமோகன் இந்துத்துவத்தின் பொற் குடத்தைக் கரி பூசி வீசி எறிவது கலை சுதந்தரம் அல்ல.
பஞ்ச காலத்திலும் தலித் மீதான இந்து சமூகத்தினரின் பெரு வெறுப்பே செயல்பட்டிருந்தது என்றால், தலித் சமூகம் அவர்களை அரவணைப்பதற்காகவே அலைந்து திரிந்த கிறிஸ்தவ பாதிரியார்களின் அங்கிக்குள் வெகு எளிதாக தஞ்சம் புகுந்துவிட்டிருக்குமே. அப்படியொன்று நடந்திருக்காத நிலையில் உண்மை வேறு என்னவாக இருந்திருக்கும் என்ற எளிய கேள்வி ஜெயமோகனுக்குக்கூட தோன்றாமல் போனது விசித்திரமே.
நாவலில் சொல்லப்படும் அதே பஞ்ச காலத்தில் அதே செங்கல்பட்டு சுற்றுவட்டாரங்களில் கோவிந்த ஐயர் என்பவர் மிகப்பெரிய அளவில் கஞ்சித் தொட்டி அமைத்து பசியால் வாடியவர்களுக்கு உணவளித்திருக்கிறார். ஆரம்பத்தில் சிறிய அளவில் ஆரம்பித்தவர் பஞ்சம் தலைவிரித்தாடத் தொடங்கியதும் ஊர் ஊராகச் சென்று தானியங்களைக் கொள்முதல் செய்து ஏராளமானோருக்கு உணவிட்டிருக்கிறார்.
வாணியம்பாடி திருப்பத்தூர், சேலம்
மற்றும் மாமூர் குழியம் முதல்
வேளாவூரிலுள்ள ஆட்டக்காரரெல்லாம்
மேவி வந்ததைக் கேளுங்கடி
வடக்கிலுள்ள தாழ்ந்த சாதிகள்,
வகையுடன் கையில் சட்டிகளை
எடுத் தூரூராய் போய் கூழை
இரந்து குடிக்குறார் பாருங்கடி.
என்ற தாது வருடப் பஞ்சம் பற்றிய பாடல் தாழ்ந்த சாதிகள் இரந்து பிழைக்க நேர்ந்ததை மட்டுமல்ல அவர்களுக்கு கூழ் வார்க்க பலர் இருந்ததையும்தானே சொல்கின்றன. புழுங்கல் அரிசி சாப்பிடமாட்டேன் என்று சொன்னவர்களெல்லாம் அதைச் சாப்பிட்டாக வேண்டிய நெருக்கடி வந்ததாகவும் இன்னொரு இடத்தில் சொல்கிறது.
பஞ்சம் தாக்கிய பகுதிகளில் வட ஆர்க்காடு மாவட்டமும் ஒன்று. அம்மாவட்டத்தின் கிராமப்பகுதியிலிருந்து வந்த பட்டினிக் கூட்டத்தால் வேலூர் நகரமே திணறியது. பஞ்சம் தாக்கிய சேலம், கோவை, மதுரையைச் சேர்ந்த மக்கள், காவிரிப் படுகையை நோக்கிச் சென்றனர். 1876 அக்டோபர் முதல் மே மாதம் வரை தஞ்சை மற்றும் அதன் சுற்றுப்புறத்திலிருந்த 15 அன்னச் சத்திரங்களில் சுமார் 5 லட்சம் பேருக்கு இலவச உணவு அளிக்கப்பட்டதாக அம்மாவட்டத்தின் அன்றைய கலெக்டர் தாமஸ் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார்.
(இந்தத் தகவல்கள் தினமணிக் கதிரில் எஸ். சிவகுமார் எழுதிய கட்டுரையில் இடம்பெற்றிருக்கும் தகவல்கள். அது சொல்வனத்தில் மறு பிரசுரம் செய்யப்பட்டுள்ளது. http://solvanam.com/?p=31330)
வள்ளலாரும் இதே காலகட்டத்தில்தான் பசிப்பிணி போக்க தீவிர நடவடிக்கைகள் எடுத்திருக்கிறார். அவருடைய மார்க்கத்தில் அன்னதானம் மிக முக்கியமான இடத்தை எடுத்தற்கு பஞ்சத்தில் மக்கள் பட்ட கஷ்டத்தைப் பார்த்து மனம் வாடியதுதான் முக்கிய காரணமாக இருந்திருக்கும். ஆன்மிக தத்துவ விசாரங்கள் எல்லாம் ஒருபுறம் இருக்கட்டும். முதலில் மனிதருக்கு அடிப்படைத்தேவை உணவு என்ற புரிதலுடன் இயங்கியவர் அவர்.  இன்று அன்னதானங்கள், விடிந்த பின்னும் எரியும் தெருவிளக்குகள் போல் தேவையற்றதாகி ஆகிவிட்டிருக்கின்றன. ஆனால், இருள் சூழ்ந்திருந்த ஒரு காலத்தில் வேண்டிய வெளிச்சத்தை அவையே தந்திருக்கின்றன. இவையெல்லாம் ஜெயமோகனின் கண்ணில் படாமல் போனது ஏன்?
இது தொடர்பான கேள்விகள் நூலின் விமர்சனமாக முன்வைக்கப்பட்டபோது இந்து சக்திகளின் இப்படியான நல்லெண்ண முயற்சிகள் எல்லாம் மிகவும் சொற்பமானவை என்று புறங்கையால் ஒதுக்கிவிடுகிறார் ஜெயமோகன்.  பிரிட்டிஷ் கால இந்தியா பற்றிய கிறிஸ்தவ சார்பு ஆவணங்களே நமக்குக் கிடைத்திருக்கும் நிலையில் இந்து சக்திகள் செய்த நல்ல செயல்கள் எல்லாம் இருட்டடிப்பு செய்யப்பட்டிருக்க வாய்ப்பு உண்டு என்ற எளிய உண்மைகூட மிகப் பெரிய புனைவெழுச்சியைத் தரவல்லதுதான்.
***
கடந்த கால சமூகத்தினர் இயற்கைப் பஞ்சங்களில் இருந்து தம்மைக் காப்பாற்றிக்கொள்ள சில வழிமுறைகளைப் பின்பற்றிவந்ததுண்டு. கூண்டோடு இடம் பெயர்வது ஒரு வழிமுறை. அந்த கிராமத்துக்குச் சென்று பார்த்தால் யாருமே இருக்கமாட்டார்கள். அனைவரையும் பஞ்சத்தால் இறந்தவர்களாக பிரிட்டிஷார் கணக்கில் வைத்துகொள்வார்கள். ஆனால், அந்த மக்களோ ஓரளவுக்கு வசதியான இடத்துக்கு இடம்பெயர்ந்துவிட்டு மழை பொழிய ஆரம்பித்ததும் ஊர் திரும்பிவிடுவார்கள். அந்தவகையில் இந்திய பஞ்சம் தொடர்பாகச் சொல்லப்படும் புள்ளிவிவரங்கள் ஒருவகையில் வெகுவாக மிகைப்படுத்தப்பட்டவையே. மேலும் பஞ்ச காலங்களில் கஞ்சித்தொட்டி அமைத்தல், வெள்ளக்காலங்களில் கோயில்களில் தங்க இடம் தருதல் என நிவாரணப் பணிகள் முன்னெடுக்கப்பட்டிருக்கின்றன. மேல் சாதி நில உடைமையாளர்கள் குத்தகைக்கு நிலத்தைக் கொடுத்திருக்கும்போது பஞ்ச காலங்களில் (பூ கருகிப் போகும்போது) குத்தகைக் கூலியை ரத்து செய்வதுண்டு.  எனவே, சாதி இந்துக்கள் அப்படி ஒன்றும் அரக்கர்கள் அல்ல.
தொலைநோக்குப் பார்வை இல்லாதது, சேமிப்பில் ஈடுபடாதது, அன்றைய தேவைகளை மட்டுமே கவனத்தில் கொண்டு வாழ்க்கையைக் கொண்டாட்டமாக வாழ்வது போன்ற வாழ்க்கை முறையினால் பஞ்சம், வெள்ளம் போன்ற இயற்கைப் பேரிடர்களில் முதன்முதலில் பாதிக்கப்படும் சமூகமாக தலித் சமூகம் இருந்துவந்திருக்கிறது. அவர்களுடைய அசுத்தமான வாழ்விடம் நோய்களைப் பெருக்கிப் பேரழிவை கொண்டுவந்திருக்கிறது. இந்த அம்சங்கள் எதுவும் தலித்துகளைக் குறைகூறும் நோக்கில் அல்லாமல், நடைமுறை யதார்த்தம் என்ற வகையில்கூட நாவலில் இடம்பெறவில்லை. இவைகூடப் பெரிய பிழையாகத் தெரியவில்லை. ஆனால், பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் செயற்கையாக உருவாக்கப்பட்ட பஞ்சங்களின்போது நடக்கும் கொடுமைகளுக்கும் இந்து சாதி சமூகமே காரணம் என்பது ’பீட்டிங் ஃபேவரைட் விப்பிங் பாய்’ கதைதான்.  அந்த செயற்கைப் பஞ்சங்களின்போது இந்து மேல் சாதியினர் கூடுதல் உதவிகளைச் செய்து கொடுத்திருக்கவேண்டும் என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. ஆனால், அவர்கள் செய்த உதவிகள் எல்லாம் புனைவெழுச்சிக்குத் தோதுப்படாது என்பதால் முற்றாகப் புறமொதுக்கப்படுவது தவறு. பிரதான குற்றவாளிகளான பிரிட்டிஷாரின் கொடுமைகளை எல்லாம் வார்த்தைகளாக நிரப்பிவிட்டு மேல் ஜாதிக் கொடுமையைமட்டும் அழுத்தமான காட்சியாகச் சித்திரித்திருப்பது மிகவும் அபாயகரமான அரசியலே. அவதூறுகளை கொட்டை எழுத்தில் முதல் பக்கத்தில் பிரசுரித்துவிட்டு, வருத்தத்தை கண்ணுக்குத்தெரியாத ஓர் மூலையில் இடம்பெறச் செய்யும் வணிகப் பத்திரிகை தந்திரமே அது.
நாவலில் கூறப்படும் பனிக்கட்டி உண்மையில் எந்த அளவு பெரிதாக இருந்ததோ அது புனைவெழுச்சிக்குப் போதுமானதாக இருந்திருக்கவில்லை என்பதால் அதை பூதாகரமாக ஒரு யானைபோல் பல மடங்கு ஊதிப் பெருக்கிக் கொண்டதாக ஜெயமோகனே கூறியிருக்கிறார். அவர் சொல்லாமல் விட்ட விஷயம் என்னவென்றால், பஞ்சத்தின் இழப்பையும் மேல் சாதி இந்துக்களின் குற்றத்தையும் அதேவிகிதத்தில் மிகைப்படுத்திவிட்டிருக்கிறார். அந்தவகையில் தாது வருடப் பஞ்சத்தில் தலித்கள் பட்ட வேதனையைவிட வெள்ளையானையில் அவர்கள் படும் வேதனை வெகு அதிகமாக இருக்கிறது. பாவம் அந்த துராத்மாக்கள்.
பஞ்ச காலம் என்பது ஒரு சமூகத்தின் அனைத்து அமைப்புகளையும் நிலைகுலைய வைக்கும் தன்மை கொண்டது. உணவுப் பொருட்கள் தட்டுப்பாடு ஏற்படும் என்பதால் அனைத்து மனித உறவுகளும் சிதையத்தான் செய்யும்.  உறவினர்களுக்குக்கூட கொடுக்காமல் பதுக்கி வைக்கும்படிச் செய்யும்.  நோய்கள் பெருகி இறப்புகள் அதிகரிக்கும். முந்தைய சிகிச்சை மையங்களால் இதைக் கையாள முடியாமல் போய்விடும். தலித்கள் மட்டுமல்ல சாதி இந்துக்களும் செத்து மடிந்திருப்பார்கள். தலித்களிலும் பொருளதார வசதி படைத்த அல்லது பொருளாதார வசதிபடைத்தவர்களிடம் பணி புரியும் தலித்கள் இந்தப் பஞ்சத்தால் இந்த அளவுக்கு பாதிக்கப்பட்டிருக்கமாட்டார்கள். சாதி இந்துக்களில் ஏழைகள் மிக மோசமாக பாதிக்கப்பட்டிருப்பார்கள். செயற்கைப் பஞ்சத்திலும் பொருளாதாரத் தாக்கமே அதிகமாக இருக்கும்.
ஒரு சமூகம் இயற்கைப் பேரிடர்களுக்குப் பழக்கப்பட்டு சில நிவாரண வழிகளைக் கண்டடைந்திருக்கும். செயற்கைப் பஞ்சம் என்பது அதற்குப் பழக்கமில்லாததாக இருக்கும். அந்த சமூகத்தின் ஆக்கபூர்வ சக்திகளின் முயற்சிகள் போதுமானதாக இருந்திருக்காது. தகவல் தொடர்பும், போக்குவரத்து வசதிகளும் இருந்திராத ஒரு காலகட்டத்தில் அந்த சக்திகள் தமது பலத்தை ஒருங்கிணைக்க முடிந்திருக்காது. இவையெல்லாவற்றையும் சேர்த்துத்தான் ஒரு முடிவுக்கு நீங்கள் வரவேண்டியிருக்கும்.
பொதுவாக ஜெயமோகன் தனது எழுத்து தன்னை மீறிய ஓர் உன்மத்த நிலையில் நிகழ்வதாகச் சொல்வார். எந்தவொரு படைப்பையும் தானாக எழுதுவதில்லை. அதுவே தன் வழியாக எழுதப்படுகிறது என்றும் சொல்வார். விஷ்ணுபுரம் நாவலில்கூட தான் விரும்பியிராத வகையில் நாத்திக அம்சம் தூக்கலாக வெளிப்பட்டுவிட்டதாகச் சொல்லியிருக்கிறார். அவரைப் பொறுத்தவரையில் கலை மனமானது கட்டுகளை அறுத்தெறிந்து காட்டில் சீறிப் பாயும் குதிரையைப் போன்றது. ஆனால், இந்த நாவலில் அப்படியான எந்தப் பாய்ச்சலும் நிகழவில்லை. மிகவும் திட்டமிட்டபடியே முன் தீர்மானங்களுக்கு ஏற்பவே நாவல் முழுவதும் எழுதப்பட்டிருக்கிறது. பதிப்பாளருக்கு உவப்பில்லாத ஒற்றை வரி கூட இந்த நாவலில் இடம்பெறவில்லை. இந்து ஆன்மிக மரபும் சாதி அமைப்பின் சாதகமான அம்சங்களும் முற்றாக இந்த நாவலில் இருந்து முழுவதுமாக நீக்கப்பட்டிருக்கிறது (ஜெயமோகனின் ஆளுமையை மனதில் கொண்டு சொல்வதென்றால், பதிப்பாளர் சொல்லி இப்படிச் செய்திருக்கமாட்டார். தானாகவே அந்த விலங்கை தனக்குப் பூட்டிக்கொண்டிருப்பார்.)
***
ஏய்டன் என்ற அயர்லாந்து விவசாயக் குடும்பத்தில் பிறந்த ஒருவன் பிரிட்டிஷ் அரசுப் பிரதிநிதியாக மதராஸ பட்டணம் வந்துசேருகிறான். ஒருநாள் அவன் தன் குதிரையில் கடற்கரைச்சாலையில் செல்லும்போது நீலமேகம் என்னும் கங்காணி இருவரைச் சாட்டையால் அடிப்பதைப் பார்க்கிறான். அடிவாங்கும் இருவரும் கணவன் மனைவி என்பதும் பக்கத்தில் இருக்கும் ஐஸ் ஃபேக்டரியில் பணிபுரிபவர்கள் என்பதும் தெரியவருகிறது. மேதகு மகாராணியாரின் ஆட்சியில் பணியாளர்களை இப்படிச் சாட்டையால் எல்லாம் அடிக்கக்கூடாது என்று தடுக்கிறான். அலுவலகத்துக்குத் திரும்பி தன்னுடைய படையை அழைத்துச் சென்று நீலமேகத்தைக் கைது செய்யப் போகிறான்.  அந்த ஐஸ் ஃபேக்டரி அமெரிக்கர்களுக்குச் சொந்தமானது. அதன் இயக்குநர் ஃபார்மர் தனது கங்காணிகள் அப்படி நடந்துகொள்ளமாட்டார்கள், நல்லவர்கள் என்று சொல்கிறார். ஏய்டன் ஃபேக்டரிக்குள் சென்று பார்க்கிறான். ஐஸ்கட்டிகள் வெள்ளை யானைபோல் பிரமாண்டமாக இருக்கின்றன. அந்தப் பணிச்சூழல் படு மோசமாக இருக்கிறது. அடிக்கப்பட்ட இரண்டு தொழிலாளர்களும் அங்கு இல்லை. அவர்களுக்கு என்ன நடந்தது என்பதும் தெரியவில்லை.
இதனிடையில் காத்தவராயன் என்ற தலித் பிரதிநிதி ஒருவனை ஏய்டன் சந்திக்கிறான். அவனும் சாட்டையாலடிக்கப்பட்ட அந்தத் தொழிலாளர்களைத் தேடித்தான் அங்கு வந்திருக்கிறான். அந்த இருவருக்கும் மருத்துவ உதவி செய்து தரும்படி ஒரு ஆஸ்திரியப் பாதிரியாரிடம் இருந்து கடிதம் வாங்கி ஃபார்மரிடம் கொடுக்கச் சொல்லி ஆலோசனை சொல்லியிருந்தான். அவர்களுக்கு என்ன ஆனது என்று தேடி வருகையில்தான் ஏய்டனைச் சந்திக்கிறான். அவன் மூலமாக தலித்களின் நிராதரவான நிலை ஏய்டனுக்குத் தெரியவருகிறது. நாட்டில் செயற்கைப்பஞ்சம் தலைவிரித்து ஆடுகிறது. பிரிட்டிஷார் இந்திய விளை நிலங்களில் தமது பணப்பயிர்களை நட்டு வளர்த்ததன் மூலமும் அதிக வரி விதித்ததன் மூலமும் அயல்நாடுகளில் இருக்கும் பிரிட்டிஷ் படைவீரரர்களுக்காக ஏற்றுமதியை அதிகரித்ததன் மூலமும் செயற்கைப் பஞ்சத்தை உருவாக்கியிருக்கிறார்கள். . தலித் மக்கள் கொத்துக் கொத்தாக செத்து விழுகிறார்கள்.
இதைப் பார்த்து மனம் வருந்தும் ஏய்டன் ட்யூக்கிடம் பஞ்சம் தொடர்பாக ஒரு அறிக்கையை சமர்ப்பித்து தலித்களுக்கு ஏதேனும் நல்லது செய்யலாம் என்று நினைக்கிறான். முதல்கட்டமாக ஐஸ் ஹவுஸில் பணி புரிந்து காணாமல் போன இருவரைக் கண்டுபிடித்து, ஒருவேளை அவர்கள் கொல்லப்பட்டிருந்தால் நீலமேகத்துக்கு தண்டனை வாங்கித் தரவேண்டும். ஐஸ் ஹவுஸ் பணிச் சூழலை மேம்படுத்தவேண்டும் என்று முயற்சி செய்கிறான். காத்தவராயனின் வழிகாட்டலில் ஐஸ் ஹவுஸ் பணியாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுகிறார்கள். இந்தியாவில் நடந்த முதல் வேலைநிறுத்தம்.
அவர்களுடைய கோரிக்கைகளுக்கு முதலில் மறுப்புத் தெரிவிக்கும் அமெரிக்கரான ஃபார்மரும் பின்னர் அந்த கோரிக்கையை ஏற்றுக்கொள்கிறார். ஏய்டனும் காத்தவராயனிடம் விஷயத்தை எடுத்துச்சொல்லி வேலை நிறுத்தத்தை வாபஸ் வாங்கிக் கொள்ளச் சொல்கிறான். ஆனால், அந்த நிறுவனத்தின் நிதி ஆலோசகரான முரஹரி ஐயங்கார் தலித்கள் மீது கடுமையான வெறுப்பு உடையவர்.  ’தலித்துகள் எல்லாம் செத்து ஒழிய வேண்டியவர்களே. அவர்கள் மீது எந்தக் கருணையும் காட்டத் தேவையில்லை. அவர்கள் முற் பிறவியில் செய்த தீவினைகளின் பலனாகத்தான் இழிவான வாழ்க்கை அவர்களுக்குக் கிடைத்திருக்கிறது. அதுவும் அதிகாரத்தை எதிர்க்கும் அளவுக்குத் துணிந்துவிட்ட தலித்துகளை அடியோடு ஒழித்தாகவேண்டும்’ என்று ஆவேசப்படுகிறார். அவரை மீறி அமெரிக்கரான ஃபார்மராலும் பிரிட்டிஷ் பிரதிநிதியான ஏய்டனாலும் எதுவும் செய்ய முடியாமல் போய்விடுகிறது. வேறு வழியின்றி கோரிக்கைகள் நிறைவேறாமலேயே வேலை நிறுத்தத்தை வாபஸ் பெற வேண்டிய அவசியம் ஏற்படுகிறது. காத்தவராயன் சென்று மக்களிடையே பேசுகிறான். ஆனால், போராடத் தொடங்கிவிட்ட மக்களோ பின்வாங்க மறுக்கிறார்கள்.
முரஹரி ஐயங்கார் வேலை நிறுத்தத்தை வாபஸ் வாங்கிக்கொண்டு செல்லும்படி கூட்டத்தைப் பார்த்து மிரட்டுகிறார். வேலை நிறுத்தம் நடக்கும் ஃபேக்டரிக்கு பாதுகாவலுக்கு வந்த ஏய்டனின் படையினர் கூட்டம் கலையாமல் இருப்பதைப் பார்த்ததும் ஆவேசப்படுகின்றனர்.  தாக்குதலுக்கான உத்தரவை ஏய்டன் தன்னையறியாமல் தந்துவிடுகிறான். குதிரைப்படை மூர்க்கத்தனமாக போராட்டக்காரர்களை அடித்து துவம்சம் செய்கிறது.  கூட்டுக் கலவியை ரசிப்பதைப்போல் முரஹரி ஐயங்கார் அந்தப் படுகொலையை ரசிக்கிறார்.  ஏய்டனோ குற்ற உணர்ச்சியினால் தன்னைத்தானே சுட்டுக் கொன்று தற்கொலை செய்யவும் முனைகிறான். ஆனால், அதிர்ஷ்டவசமாகப் பிழைத்துவிடுகிறான்.
இதனிடையில் இந்து சாதி அமைப்பின் கோர முகத்தை முரஹரி ஐயங்காரின் வடிவில் கண்டுகொண்ட காத்தவராயன் புத்த மதத்துக்கு மாறுகிறார். எய்டன் தனது செயலுக்குப் பிராய்ச்சித்தமாக ஐஸ் ஹவுஸ் போராட்டத்தைப் பற்றியும் பஞ்சத்தின் கோர தாண்டவத்தையும் நெஞ்சுருக எழுதி ட்யூகிடம் தருகிறான். ஐஸ் ஹவுஸ் ஃபேக்டரியில் இருக்கும் நீல மேகத்தையும் அவரைப் போன்ற கங்காணிகளையும் கைது செய்ய அனுமதி கேட்கிறான். அவரோ அதை விரும்பவில்லை. எனவே, ஏய்டனை அங்கிருந்து அகற்ற விரும்புகிறார். அவனுக்கு பதவி உயர்வு கொடுத்து வேறு ஊருக்கு அனுப்பிவிடுகிறார். அவன் அனுப்பிய பஞ்சம் தொடர்பான அறிக்கையைப் பயன்படுத்தி மக்களுடைய துயரைத் துடைக்க நலத்திட்டங்கள் தொடங்குகிறேன் என்ற போர்வையில் பெரும் தொகையைச் சுருட்டத் திட்டமிடுகிறார். நடக்கும் நிகழ்வுகளை எப்படி எதிர்கொள்ள என்று தெரியாமல் தவிக்கும் ஏய்டன் பதவி உயர்வை ஏற்றுக்கொண்டு அதிகார எந்திரத்தின் ஓர் கண்ணியாகத் தன்னை பெரும் வேதனையுடன் இணைத்துக்கொள்வதோடு நாவல் முடிகிறது.
***
இந்து சாதிய அமைப்பு குறைகள் உடையதுதான். விமர்சிக்க வேண்டியதுதான். உலகில் தோன்றிய குழு அடையாளங்களில் இன வெறி, நிற வெறி, மதவெறி, மொழி வெறி போல எல்லாம் சாதி வெறி கொடூரமானது இல்லை என்ற போதிலும் அதுவும் ஒருவகை வெறியாகவே வெளிப்பட்டிருக்கிறது, வெளிப்பட்டுவருகிறது என்பது உண்மைதான். அதிலும் அதனால் பாதிக்கப்பட்ட தலித் பிரிவினருக்கு உலக வரலாற்றில் சாதி வெறி எந்த இடத்தில் இருக்கிறது என்ற ஒப்பீடெல்லாம் இல்லாமல் தம்மளவில் அதை முழு மூச்சுடன் எதிர்க்க எல்லா நியாயமும் உண்டு.  அத்தகைய தலித் பிரதிநிதி ஒருவரை அல்லது அப்படியான நிகழ்வை கதையின் மையமாகக் கொண்டுவிட்டிருக்கும் நிலையில் அந்த அரசியல் பார்வையே நாவலில் பிரதானமாக இருக்கும் என்பதையும் புரிந்துகொள்ளமுடிகிறது. ஆனால், கலைஞனுடைய வேலை அரசியல் பிரசாரக் கையேடு எழுதித் தருவதல்ல.  புனைவுச் சுதந்தரம் என்பது வரலாற்றின் இடைவெளிகளை நிரப்புவதாக இருக்கவேண்டுமே தவிர திரிப்பதாக இருக்கக்கூடாது.  வரலாற்றில் பொய்யாகப் புனைந்திருக்கும் ஒன்றை தோலுரித்துக் காட்டலாம். ஜோதியில் ஐக்கியமானார் என்று ஆதிக்க சக்தி வரலாறு புனைந்திருந்தால் தீ வைத்துக் கொளுத்திவிட்டார்கள் என்று அதைக் கட்டுடைக்கலாம். அங்கு நீங்கள் உண்மை வடிவில் இருக்கும் ஒரு பொய்யை அம்பலப்படுத்துகிறீர்கள். ஆனால், பஞ்ச காலத்தில் இந்து சாதி அமைப்பு தன்னால் முடிந்த நிவாரணப்பணிகளை எடுத்திருக்கும் நிலையில் அது தலித்களை முற்றாகப் புறக்கணித்துவிட்டது என்று அடிவயிற்றில் இருந்து அறக்கூச்சல் போடுவது நியாயமே அல்ல.
எந்தவொரு சமூகமும் பஞ்சம், வெள்ளம் போன்ற நேரங்களில் தடுமாறத்தான் செய்யும் என்ற நடைமுறை யதார்த்தத்தை ஒற்றை வரியில் சாதுரியமாகக் கடந்து சென்றிருக்கிறார். அந்தப் புள்ளி இன்னும் விரிவடைந்திருக்கவேண்டும். அதோடு, ஒரு சமூகத்தின் அற உணர்வு பற்றிப் பேசுவன்றால் அதன் இயல்பான காலத்தில் அதன் செயல்பாடுகள் எப்படி இருக்கிறது, நெருக்கடி காலங்களில் எப்படி மாறுகிறது என்பதையெல்லாம் கணக்கில் எடுத்துக்கொண்டு ஒட்டுமொத்த சித்திரத்தை உருவாக்கவேண்டும். ஒருவனுடைய குரலின் இனிமை அல்லது இனிமையின்மை பற்றிப் பேசுவதென்றால் அவருடைய கழுத்து நெரிக்கப்பட்ட நேரத்தில் அது எப்படி இருக்கிறது என்பதை வைத்தா மதிப்பிடுவது? வரலாற்றில் அணையாமல் கிடக்கும் அனலின் மீது நமது வெட்டிதர்க்கங்களைப் போட்டு மூடக்கூடாதுதான். அதேநேரம் புனைவின் நெய்யை ஊற்றி அதைக் கிளர்ந்தெழச் செய்யவும் கூடாதல்லவா? அரசியல் பிழைத்தோர்க்கு மட்டுமல்ல அறம் பிழைத்தோர்க்கும் அறமே கூற்றாகும்.
பஞ்ச காலம் என்பது ஆதிக்க சக்திகளைக் குற்றவாளைக்கூண்டில் நிறுத்தி அறச்சீற்றத்தோடு கேள்வி கேட்க வேண்டிய காலகட்டம் அல்ல.  ஒரு மனிதனின் முகத்தில் பேய் அறைவதுபோன்ற ஒரு நிகழ்வு அது.  அவனுடைய அனைத்துப் புலன்களும் கலங்கி நிற்கும் தருணம் அது.  பஞ்ச காலகட்டத்தின் ஆன்மா என்பது மனித இனம் நிராதரவாகக் கைவிடப்படும் காலகட்டம். மனித உணர்வுகள் அத்தகைய காலகட்டத்தில் எப்படி சுயநலம் மிகுந்ததாக, மிருக நிலைக்குப் போய்விடுகிறது என்பதைக் கனக்கும் இதயத்தோடு சொல்லவேண்டிய காலகட்டம்.   இன்னொருவகையில் பார்த்தால் அதே நெருக்கடிதான் சிலரைப் பொது நலன் நோக்கி இழுக்கவும் செய்யும்.  ஒற்றைப் படை அரசியல் முழக்கங்கள் எல்லாம் கலைப்படைப்புக்கு உகந்தவை அல்ல. அது ஊரில் சுட்டெரிக்கும் சூரியன் மட்டுமே இருந்தது நிலவே இல்லை என்று சொல்வதைப் போன்றதுதான்.
அதோடு, இந்தியாவைப் பொறுத்தவரை தாது பஞ்ச காலகட்டம் என்பது மன்னராட்சியின் நல்ல அம்சங்கள் எல்லாம் சிதைக்கப்பட்டு மக்களாட்சியின் நல்ல அம்சங்கள் எதுவும் வேரூன்ற ஆரம்பித்திராத காலகட்டம் (பிரிட்டிஷாரின் ஆட்சி காலம் முழுவதுமே அப்படியானதுதான்). எனவே அந்தவகையிலும் அது துரதிஷ்டவசமான காலகட்டமே. அதே காலகட்டத்தில்கூட பிரிட்டிஷ் ஆட்சி நேரடியாக இருந்திராத சம்ஸ்தானங்களில் பஞ்ச நிவாரணப் பணிகள் மன்னர்களால் திறம்பட மேற்கொள்ளப்பட்டிருப்பதை ஒருவர் பார்க்க முடியும். சூரியன் முழுவதுமாக மறைந்து நிலவு முளைப்பதற்கு முந்தைய கட்டத்தில் நட்சத்திரங்களின் மினுமினுப்பைப் புறந்தள்ளிப் பார்த்தால் வானம் பெரிதும் இருண்டே காணப்படும். ஆனால், அந்த இருள் அந்த வானின் நிரந்தர நிறமல்ல.
ஹிட்லரிய வதைமுகாம் போன்ற கொடுஞ்செயல்கள் சரித்திரத்தில் நிகழும் போதுதான் ஆதிக்க சக்தியை முழுவதுமாகக் குற்றவாளிக்கூண்டில் ஏற்ற முடியும். அந்த பேரழிவில்கூட மனிதாபிமானத்துடன் செயல்பட்ட ஆஷ்கார் சிண்ட்லரைத் தேடிக்கண்டுபிடித்து முன்வைப்பதுதான் மேற்கத்திய கலையின் அரசியல்.  இந்தியாவைப் பொறுத்தவரையில் எதற்கெடுத்தாலும் இந்து சக்திகளைக் குற்றம் சாட்டுவதும் அதே மேற்கத்திய நாணயத்தின் மறுபக்கமே. ஜெயமோகனும் அந்த நாணயத்தைப் பட்டை தீட்டித் தரும் ஒருவராகப் போனது வரலாற்றின் முரண் நகையே.  அஞ்ஞாடியில் பூமணி இதே தாது வருடப் பஞ்சம் பற்றி எழுதியிருப்பதாகச் சொன்னார்கள்.  உண்மை நிலையை அவராவது தொட்டுக்காட்டியிருக்கிறாரா என்று பார்க்கவேண்டும்.
ஜாலியன் வாலாபாக் படுகொலையில் கூட சுட்டு வீழ்த்தியவர்கள் அனைவருமே இந்தியர்கள்தான். அதோடு துப்பாக்கிக்கு இரையானவர்களுக்கு இணையாக உயிர் பயத்தில் ஓடியதில் கூட்ட நெரிசலில் மிதிபட்டு இறந்தவர்களின் எண்ணிக்கையும் கணிசமாக இருக்கும். அவர்களையெல்லாம் அந்த மக்களே கொன்றுவிட்டதாகச் சொல்லி அறச்சீற்றக் கேள்விகளை ஒருவர் முன்வைத்தால் அது எவ்வளவு பிழையானதாக இருக்குமோ அந்த அளவுக்கு இல்லையென்றாலும் இந்த நாவலும் ஓரளவுக்கு அந்த திசையிலேயே பயணிக்கிறது.
நாவலின் அரசியல் அம்சத்தை விட்டுவிட்டு கலை மதிப்பைப் பாத்தால் இந்த நாவல் அவருடைய முந்தை நாவல்களின் கலை நேர்த்தியையும் அமைதியையும் இழந்து நிற்பதாகவேபடுகிறது. ஜெயமோகன் ஓர் எழுத்தாளர் என்பதால், நாயகனும் எழுத்தாற்றல் கொண்டவனாகவே நாவலில் வருகிறான். மேலும் அவனுடைய இந்தக் கலைத்திறமைக்கு நியாயம் கற்பிக்கும்வகையில் அவன் ஷெல்லியின் தீவிர காதலனாக முன்வைக்கப்படுகிறான். இவையெல்லாம் கொஞ்சம் செயற்கையாகவே இந்த நாவலில் இடம்பெற்றிருக்கின்றன.  அந்த எழுத்தளனும் கவித்துவ வார்த்தை ஜாலங்களில் ஈடுபாடு உடையவனாகவே இருப்பதால், பஞ்சம் பற்றிய விவரங்கள் எல்லாம் அவனுக்கு வெறும் ஓர் அறிக்கை போல, புள்ளிவிவரம் போலவே படுகிறது. நாவலிலேயே இது குறிப்பிடவும்படுகிறது. ஆனால், ஜெயமோகனுக்குகூட இந்த பஞ்ச நிகழ்வுகளானது ஓர் அபாரமான கதைக்களமாகவே பட்டிருக்கிறது என்பதே இந்த ஆர்ப்பாட்டமான நடையினால் தெரியவருகிறது.
இந்த நாவலில் இரண்டு விஷயங்கள் பிரதானமாகப் பேசப்படுகின்றன. ஒன்று பஞ்ச காலக் கொடுமைகள், இன்னொன்று முதல் தொழிற் சங்கப் போர். ஐஸ் ஹவுஸில் நடக்கும் தொழிலாளர் எழுச்சியை அதன் நிதி ஆலோசகரான முரஹரி ஐயங்கார் மிக மூர்க்கமாக அடக்குகிறார். பிரிட்டிஷ், அமெரிக்க பிரதிநிதிகள் எதுவும் செய்ய முடியாமல் உறைந்து நிற்கிறார்கள். இதோடு நிறுத்தாமல் அந்த முரஹரி ஐய்யங்கார் மீதே பஞ்ச கால வெறுப்பும் குவியவேண்டுமென்பதற்காக அந்த நிகழ்வுகள் குறித்த அவருடைய விட்டேத்தியான படு மோசமான கருத்தையும் நாவலில் வலிந்து செருகுகிறார். அதைவிட காத்தவராயனென்னும் தலித் கதாபாத்திரம் தலித்களின் வேதனைகளுக்கு வருந்துவதைவிட எட்டி உதைக்கும் பிரிட்டிஷ் காலணிகளுக்கு நாவால் பாலிஷ் போடுவதையே பிரதான குறிக்கோளாகக் கொண்டு செயல்படுகிறார்.
இந்த நாவல் திட்டமிட்டு எழுதப்பட்டது என்ற விமர்சனத்தை எதிர்கொள்ளும்போது எல்லா கலைப்படைப்புகளுக்குமே திட்டமிடல் உண்டு என்று நியாயப்படுத்தியிருக்கிறார் ஜெயமோகன். ஆனால், விஷயம் என்னவென்றால் அந்தத் திட்டமிடல் கலை சார்ந்ததா அரசியல் சார்ததா என்பதுதான் கவனத்தில் கொள்ளவேண்டிய விஷயம்.
அரசியல் முன் தீர்மானத்துக்கு உவப்பில்லாத தரவுகள் அனைத்துமே இந்த நாவலில் வடிகட்டப்பட்டிருக்கின்றன.  காலமெல்லாம் கஞ்சனாக, சாதி வெறி பிடித்தவராக இருந்த ஒருவர் பஞ்ச காலத்தில் மக்கள் பட்டினியால் வாடுவதைக் கண்டதும் மனமிளகி தன் சேமிப்புக் கிடங்கில் பதுக்கி வைத்திருக்கும் உணவை மக்களுக்கு எடுத்துக்கொடுப்பதாகவும் கதை புனையப்பட முடியும்.  இதுபோன்ற புனைவுகளை இந்தக் கதையில் ஜெயமோகன் எழுதாமல் இருந்ததற்கு அவருடைய அரசியல் திட்டமிடலே காரணமாக இருந்திருக்கிறது. அதுதான் இந்த நாவலை கலை மதிப்பில் கீழிறக்குகிறது.  பதிப்பாளர்களுக்கும் தலித் விமர்க்சகர்களுக்கும் உவப்பான வரலாற்றை எழுதத் தீர்மானித்த ஜெயமோகன் நாலைந்து தலித் எளிய மக்களையும் கண்டு பேசி இந்த நாவலை உருவாக்கியிருந்தால் இந்த நாவல் அரசியல் உண்மையோடு முடங்காமல் உண்மையான உண்மைக்கு அருகில் செல்ல முடிந்திருக்கும்.
தலித்களின் வேதனையைக் கூறும் இந்த நாவல் உண்மையில் ஒரு தலித்தின் பார்வையில் விரிவடைந்திருக்கவேண்டும். அந்தக் காலகட்டத்து தலித்களின் பேச்சு வழக்கு தெரியாது என்பதால் ஏய்டனின் பார்வையில் நாவலை உருவாக்கியதாக ஜெயமோகன் கூறியிருக்கிறார். உண்மையில் பேச்சு மொழிக்கு அந்த அளவுக்கு முக்கியத்துவம் தந்திருக்கத் தேவையில்லை. அல்லது பொது உரைநடைமொழியில் எழுதிவிட்டு கதை நிகழும் பகுதியில் வாழும் தலித்களின் பேச்சை அடிப்படையாக வைத்து கொஞ்சம் பின்னோக்கிப் போய் ஒரு மொழிநடையை உருவாக்கிக் கொண்டிருக்க முடியும். தலித்களின் பார்வை என்பது இந்த பேரழிவில் சாதி இந்துக்களைக் குற்றம் சாட்டுவதாக இருந்திருக்காது என்று நினைத்தோ என்னமோ அதற்குத் தோதான மேற்கத்திய பார்வையில் நாவலை கொண்டுசென்றிருக்கிறார்.  வேறு நபர்களின் வழிகாட்டுதலின் பேரிலும் பார்வையிலும் விரிவடைந்திருப்பதற்குப் பதிலாக அந்த எளிய மக்களின் பார்வையில் உருக்கொண்டிருக்கலாம். அந்த பஞ்சத்தில் பாதிக்கப்பட்ட யாரும் இன்று உயிருடன் இருக்க வாய்பில்லை. என்றாலும் வேறு பேரழிவுகளை அவர்கள் எப்படி எதிர்கொண்டிருக்கிறார்கள் என்பதில் இருந்து இந்த நாவல் கிளை பிரிந்திருக்கலாம். . தங்களை இந்த நிலைக்கு ஆளாக்கிய சாதி இந்துக்கள் மீது அப்போதும் கோபம் கொள்ளாமல் விசுவாசத்துடன் இருக்கும் ஒரு தலித் முன்வைக்கும் விமர்சனத்தைவிடவா அரசியல் பார்வைகொண்ட தலித் பேசிவிடப்போகிறான். வெறுப்பு சக்திகளால் மூளைச் சலவை செய்யப்பட்ட அரசியல் தலித் பேசும் பேச்சைவிட எளிய தலித்தின் விசுவாசம் அல்லவா ஆதிக்க சக்திகளை ஒரு கணம் தடுமாறச் செய்யும்.
மரண தண்டனை விதிக்கும் நீதிபதி தன் பேனா முனையை உடைத்துப் போடுவதுபோல் இந்த விமர்சனம் எழுதிய விசைப்பலகையை உடைத்துப் போடுகிறேன்.  இப்படியொரு விமர்சனம் எழுதும் நிலை எனக்கு இனி வாராதிருக்கட்டும்.
-பி.ஆர். மகாதேவன்

Saturday, September 20, 2014

வெள்ளையானை நாவல் - ஒரு பார்வை.

வரலாறு பெரும்பாலும் அதிகாரத்தால் கட்டமைக்கப்படுவது. இன்று அமைப்பு மயமாக்கப்பட்ட கல்வியின் வழியாக நாம் அறியும் வரலாறு, அதிகாரத்தை கைப்பற்றியவர்கள் தங்களை குறித்தும், தாங்கள் அதிகாரத்தை அடைந்த விதத்தை குறித்தும், தாங்கள் வெற்றிக்கொண்ட எதிரிகளை குறித்தும் உருவாக்கிய வரலாற்றையே. அதிகாரத்தை இழந்தவர்களின் வரலாறு, அல்லது இன்னும் அதிகாரத்தில் அமராதவர்களின் வரலாறு, அது எத்தகைய மகத்தானதாக இருந்தாலும் மானுட சந்ததியினரை பெரும்பாலும் அடைவதில்லை. ஆனால், ஒரு சமூகமாக சாதாரண மனிதர்களாகிய நம் தோற்றுவாய், பெரும்பாலும் அதிகாரத்தை அடையாது மறைந்தழிந்த பெரும்பான்மையினரின் வரலாறாகவே இருக்கும்.

தமிழர்களாகிய நம் வரலாறாக நாம் அறிந்திருப்பது,  அதிகாரத்தில் இருந்தவர்களால்\ இருப்பவர்களால் எப்போதுமே மிகைப்படுத்தப்பட்ட ஒன்றையே - அதிகாரத்தை அடைந்தவர்களால், அந்த அதிகாரத்தின் மேன்மையை பறைசாற்றுவதற்காக உருவாக்கப்பட்டவை! இதுவே தமிழர்களின் உட்பிரிவினர்களான ஒவ்வொரு இன குழுக்களின் நிலையும். அந்தந்த இன குழுக்களின் அதிகாரத்தை அடைந்தவர்கள் தங்கள் அதிகாரத்தை பறைசாற்றவதற்காகவும், மேலும் அதிகாரத்தை அடைவதற்குமான உத்திகளின் தொகுப்பே வரலாறாக தொகுக்கப்படுகிறது.

ஆக நாம் சமூகத்தின் எந்த நிலையில் இருந்தாலும் நம் வரலாறு என நாம் அறிவது அதிகாரத்திற்காக, அதிகாரத்தால் நிலைநிறுத்தப்பட்டவற்றையே. ஆனால் நம் உண்மையான தோற்றுவாய் இந்த நிலைநிறுத்தபட்ட வரலாற்றிற்கு வெகு தொலைவில், பெரும்பாலும், அமர்ந்திருக்கும். அந்த தொலைவை நாம் அறியவேண்டுமானால் வரலாற்றின் இருண்ட பக்கங்களையும் நாம் அறிந்திருக்க வேண்டும். துரதிர்ஷ்டவசமாக அதிகார மையத்திற்கு இருள் தேவை இல்லை. ஒளியினால் மட்டுமே அதிகாரத்தை நிலை நிறுத்த முடியும். அல்லது வரலாறு என நிலைநிறுத்தப்பட்ட கல்வியின் மூலம் நாம் அறிவது கடந்த காலத்தின் ஒளிவிடத்தக்க மிகச்சிறிய கற்றைகளை மட்டுமே. நாம் அறியும் வரலாற்றிற்கு உண்மையுடனான தொடர்பு, அந்த வரலாற்றை புனைந்த அதிகார மையத்தின் உண்மைக்கான தேவையை பொறுத்தே அமைந்திருக்கும். எனவே நாம் வரலாறு என அறிவது ஒருவகையில் உண்மையுடன் கலந்த புனைவே.

அதிர்ஷ்டவசமாக வரலாற்றின் துளிகளில், ஒளிவிடும் மனதை உடைய ஆளுமைகள் அவர்களின் அதிகார நோக்கங்களிற்கு அப்பாற்பட்டு, அவர்கள் வாழும் காலத்தின் இருண்ட பக்கங்களில் தங்களின் ஒளிவிடும் மனதால் நோக்கி அந்த இருட்டுகளையும் பதிவு செய்திருக்கிறார்கள். நான் அறிந்ததுவரையில், வெள்ளையானை நாவல், அத்தகைய ஒரு ஒளிகீற்றை அடிப்படையாக கொண்டு, நம் இருண்ட கடந்த காலத்தை நம்கண்முன் கொண்டுவந்து நிறுத்துவதில் முழுமைஅடைந்துள்ள ஒரு படைப்பு.

இந்த நாவல் ஒளியூட்ட முயலும் இருண்ட தருணம், 1870 களின் இறுதியில் இந்தியாவில் உருவாக்கப்பட்ட கொடுமையான பஞ்சத்தின் கோர முகத்தையும், அந்த காலகட்டத்தில் மதராஸபட்டினத்தில் இருந்த ஐஸ்ஹவுஸ் என்னும் தொழிற்சாலையில் நிகழ்ந்த, அக்காலத்தில் ஒடுக்கப்பட்ட சமூகத்தினால் அவர்கள் வாழும் உரிமைக்காக நிகழ்த்திய ஒரு சிறிய ஆனால் ஒரு தீப்பொறியின் தருணத்தையும், அதிகார வர்க்கம் கைவிட்டு செத்தழிந்த பல இலட்சக்கணக்கான சாதாரண மக்களின் துயர தருணத்தையும். அந்த வரலாற்று நிகழ்வுகள், வரலாற்றின் இருண்ட பக்கங்கள், நாவல் ஆசிரியரின் புனைவினால் மேன்மையாக்கப்பட்டு (ஆம், மேன்மைப்படுத்தப்பட்டவற்றை மட்டுமே நம்மைப்போன்ற எளிய மனங்களால் உள்வாங்க முடியும்) நாவலாக நம் முன் விரிகிறது. நாவலின் பெரும்பகுதி ஏய்டன் பைர்ன் என்னும் பிரிட்டீஷ் காவல்துறை அதிகாரியின் பார்வையில் விவரிக்கப்படுகிறது.

\\....ஏய்டன் நன்றாகவே உணர்ந்திருந்தான், அவர்கள் எவரும் அந்த வேலையைவிட்டுச் செல்லப்போவதில்லை என்று. மாபெரும் வங்கப்பஞ்சம் தக்காணத்தையும் மதராஸையும் பரவி மூடிவிட்டிருந்து காலகட்டம். இப்போது அதை மாபெரும் தக்காணப்பஞ்சம் என்று சொல்ல ஆரம்பித்து விட்டார்கள். இந்த வேலைக்காகவே பல்லாயிரம் பேர் முண்டியடிக்கக்கூடும். அவன் பெருமூச்சு விட்டான்......\\

\\.......ஆம், இவன் மௌனமாக இறப்பான். தன்னுடைய நம்பிக்கைகளுக்காக உறுதியாக வதைபட்டு உயிர்துறக்கிற ஒரு புனிதரைப் போல, புனிதரா? என்ன வேறுபாடு? எல்லாம் நம்பிக்கைதான். புனிதரின் நம்பிக்கை எனக்கு உவப்பானதாக இருக்கிறது. அந்த தியாகம் மகத்தானதாக ஆகிறது. இவன் மிக முட்டாள்தனமான ஒன்றுக்காக, மனித ஆன்மாவுக்கே எதிரான ஒன்றுக்காக இறக்கிறான். ஆனால் இவன் இப்போதிருக்கும் மனநிலைக்கும் அந்தப்புனிதரின் மனநிலைக்கும் வேறுபாடில்லை. என்ன அபத்தம்! ஆனால் இப்படிதான் எல்லாம் நிகழ்ந்து கொண்டிருக்கிறது....\\

\\...எங்கள் மக்கள் உலகமெங்கும் ஈசல்கள் போலச் செத்து உதிர்கிறார்கள். பிள்ளைக்குட்டிகளுடன் அறியாத நாடுகளின் காடுகளில் வதைபடுகிறார்கள். நோயிலும் பசியிலும் கதறிச் சாகிறார்கள். சாகட்டும். அப்படி எங்கள் இனத்தில் தொண்ணூறு சதவிதம்பேர் செத்து குவிந்தால் கூட மிச்சமிருப்பவர்களில் சிலருக்கு மனதர்களுக்கான வாழ்க்கையை வாழ வாய்ப்பு கிடைக்கிறது என்றால்......\\

\\....பஞ்சத்தை கொண்டு வந்தது நீங்கள்தான்..............வேறு இடங்களில் இருந்து வரவேண்டிய விளைச்சலை முழுக்க நீங்கள் அள்ளிக்கொண்டு செல்வதனால் வந்தது. உங்கள் துறைமுகங்கள் முழுக்க எங்கள் உணவு மலையாக குவிந்துக்கிடக்கிறது. அங்கே எலிகள் உண்ணும் தானியம் கிடைத்தால் கூட எங்கள் பிள்ளைகளில் பாதியை சாகாமல் காத்துக்கொள்வோம்...... நேற்று நாங்கள் விளைவித்ததை வேறு சிலர் உண்டார்கள். இன்று அவர்களிடம் பிடுங்கி நீங்கள் உண்கிறீர்கள்............\\

\\......'விசித்திரம்!' என்று ஏய்டன் சொன்னான். 'மிக விசித்திரம். இப்படிப்பட்ட நிலையில் மனிதர்கள் வாழமுடியுமென்பதே ஆச்சரியம். காட்டு விலங்குகள் கூட இன்னும்சுத்தமான இடங்களில் வாழ்கின்றன'.......\\

\\....'பஞ்சத்தின் முதல் காட்ஞ்சியை நீங்கள் காணலாம் என்றான்'.....' ஏய்டன் கதவைச் சற்றே திறந்து எட்டிப்பார்த்தான். ஒரு கணத்துக்குப்பின் அமிலத்துளி விழுந்த புழுபோல அவன் பிரக்ஞ்சை துள்ளித்துடித்து தாள முடியாத உயிர் வாதையுடன் நெளிந்து முறுக்கி உதறிச் சொடுக்கி விதிர்த்தது. பெரிய ஆலமரத்தின் அடியில் பிணங்கள்........\\

\\...'அதிகபட்சம் இன்னும் ஒரு நாள் உயிரோடிருக்கும். இதை பிழைக்கச்செய்ய உங்களால் முடியாது. வாருங்கள்' என்றான் ஜோசப்.....\\

\\....ஆர்டிக் பனிமலைகளில் பனிப்பாறைச் சரிந்து கால்கள் மாட்டிக்கொள்ள பனிக்கோடாரியால் தன் காலை வெட்டி தன்னை விடுவித்துக்கொண்டு தப்பும் மாலுமிகளைப்பற்றிய கதைகளை ஏய்டன் வாசித்ததுண்டு. அக்கணத்திலி தானும் அதைத்தான் செய்கிறோம் என்று பட்டது....\\
\\...மதராஸப்பட்டினத்தில் இருந்தும் நாகப்பட்டினத்தில் இருந்தும் விசாகப்பட்டினத்தில் இருந்தும் சென்றுகொண்டிருக்கும் தானிய ஏற்றுமதியை நிறுத்தினாலே போதும் ஒரு வாரத்தில் பஞ்சம் நின்று விடும். அதை அறியாத எந்த பிரிட்டீஷ் அதிகாரியும் இங்கில்லை....\\

\\...இல்லை அவர்கள் ஜனநாயக முறையில் தங்கள் எதிர்ப்பைத் தெரிவிக்கிறார்கள். அதற்கான உரிமையை மாட்சிமைதங்கிய மகாராணியின் மணிமுடி அவர்களுக்கு அளிக்கிறது' ஏய்டன் சொன்னான்........\\

\\.....ஆனால் அவரது முகம். அது வேறுமாதிரி இருந்தது சார். அது ஒரு உச்சகட்ட பரவசத்தில் இருந்தது. ஒவ்வொரு காட்சியையும் கண்ணாலும் காதாலும் அள்ளி அள்ளிப்பருகி வெறி தீர்ப்பது போல. பிறகு நான் நினைத்துக்கொண்டேன். அங்கே நூற்றுக்கணக்கான உடல்கள் பின்னிப்பிணையும் ஒரு காமக்களியாட்டம் நடந்தால் அதைப்பார்க்கும் முகம் அப்படித்தானிருக்கும் என....\\

http://change-within.blogspot.in/2014/01/blog-post.html

Thursday, July 24, 2014

கைவிடப்பட்டவர்களின் கதை ஜெயமோகனின் நாவல் – வெள்ளை யானை

பசி வந்தால் பத்தும் பறந்துபோகும்’ என்பது வாய்வழக்கில் உள்ள ஒரு வாக்கியம். பறந்துபோகக்கூடிய பத்து குணங்களைப் பட்டியலிட்டு  ஒளவையார் ஒரு வெண்பா எழுதியிருக்கிறார். அவை எல்லாமே பசிக்கு ஆட்பட்டுத் தவிக்கிறவர்கள் ஒவ்வொன்றாக துறப்பதற்குச் சாத்தியமான குணங்கள். ஆனால், வரலாற்றில் ஒரு காலகட்டத்தில், துறப்பதற்கு ஒன்றுமே இல்லாதவர்களாக பசித்தவர்கள் காக்கை குருவிகளைப்போல செத்து விழ, அந்தப் பஞ்சத்துக்குக் காரணமானவர்கள் அந்த மரணங்களுக்கும் தமக்கும் எவ்விதமான தொடர்பும் இல்லாதவர்கள் போல நடந்துகொண்டார்கள். ஒளவையார் சுட்டிக்காட்டிய பத்து குணங்களில் பாதிக்கும் மேலான குணங்கள் அவர்களிடமிருந்தே பறந்துபோயின. முரண்களின் தொகையான அச்சம்பவம் நமது தமிழக வரலாற்றில் ஒரு பெரிய கறை. நமது மூதாதையர்களின் சமூகம் மனசாட்சியில்லாமலும் நீதியுணர்ச்சியில்லாமலும் நடந்துகொண்ட விதம் நம்மைத் தலைகுனிய வைக்கிறது. கண்ணுக்குமுன்னால் செத்துக்கொண்டிருக்கும் ஓர் உயிரை, காப்பாற்ற இயலாத கையறு நிலையில் பார்க்க நேர்வதை நம்மால் புரிந்துகொள்ளமுடியும். ஆனால், காப்பாற்றுவதற்கான எல்லா வழிகளும் இருந்தும்கூட, காப்பாற்ற மனமில்லாமலும் கைதூக்கிவிட விருப்பமில்லாமலும் இருந்ததை ஒரு கொலைக்குற்றத்துக்குச் சமமானதாகவே புரிந்துகொள்ளமுடிகிறது. நம் முன்னோர்களின் சமூகம் ஒரு கொலைகாரச்சமூகமாகவே வாழ்ந்திருக்கிறது. சாதி என்னும் குறுவாளோடு வாழ்ந்த அச்சமூகத்தின் முகத்தை வெள்ளை யானை நாவலில் ஜெயமோகன் அடையாளப்படுத்தியிருக்கிறார். வரலாற்றில் மறைந்துபோன அல்லது மறைக்கப்பட்ட ஒரு கொடுமையான சம்பவத்தை ஜெயமோகனின் எழுதுகோல் வெள்ளை யானையாகத் தீட்டிக் காட்டியிருக்கிறது.
பிரான்சிஸ் டே என்பவரால் தெலுங்கு மன்னரிடமிருந்து விலைக்கு  வாங்கப்பட்டு, கிழக்கிந்தியக்கம்பெனியின் நிர்வாக மையமாக உருவாக்கப்பட்ட மதராஸபட்டினம் மெல்லமெல்ல வேலை வாய்ப்புகளுக்கான இடமாகவும் இருந்தது. நிலங்களோடு கட்டிப் பிணைக்கப்பட்டிருந்த மேல்சாதி மக்களைவிட, எல்லாச் சாதியினர்களாலும் ஒடுக்கப்பட்டு, இழப்பதற்கு எதுவுமில்லாத தலித் மக்கள் அந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்வதற்காக  புதிய பட்டினத்தில் குடியேறத் தொடங்கினார்கள். நேர்மையில்லாத ஆட்சியாளர்களும் மனசாட்சியில்லாத மேல்சாதிக்காரர்களும் சுயலாபத்துக்காக, தலித்துகளின் உழைப்பைப் பயன்படுத்திக்கொண்டார்கள். இவ்விரண்டு கூட்டங்களின் கூட்டணியால் உருவான செயற்கைப்பஞ்சத்தில் உண்ண உணவில்லாமல் அவர்கள் கும்பல்கும்பலாகச் செத்து மட்கி  மண்ணோடு மண்ணானார்கள். எஞ்சிய ஒருசிலர் ஒருவாய் உணவுக்காக, முப்பது டன் எடையுள்ள பனிப்பாளத்தை அறுத்துத் துண்டுகளாக்கும் வேலையில் ஈடுபட்டு, உயிரோடு நடைப்பிணமானார்கள். எல்லா விளிம்புகளிலும் மரணத்தையே சந்தித்தது தலித் சமூகம். மனசாட்சியே இல்லாதவர்களுக்கு நடுவே நிகழ்ந்த அக்கரிய தருணத்தை மனசாட்சியுள்ள எய்டன் என்னும் கற்பனைப்பாத்திரத்தின் வழியாக சித்தரித்துக் காட்டியுள்ளார் ஜெயமோகன்.
ஐஸ் ஹவுஸ் என்பது மதராஸபட்டினத்தில் ஃபிரடெரிக் டியுடர் அண்ட் கம்பெனி இயங்கிய இடம். வெள்ளை ஆட்சியாளர்களின் விருந்தறைகளில், அவர்கள் அருந்தும் மதுவோடு கலப்பதற்காக லண்டன் நகரத்திலிருந்தே பனிப்பாளங்கள் கப்பல் வழியாக இறக்குமதி செய்யப்பட்டது. ஆறுமாத பயணத்திலும் கரைந்துவிடாதபடி, உயர் குளிர்நிலையில் பக்குவப்படுத்தப்பட்ட அந்தப் பாளங்கள் ஐஸ் ஹவுஸில்தான் இருட்டறைகளில் வைத்துப் பாதுகாக்கப்பட்டிருந்தன. மாபெரும் அவ்வெள்ளைப் பாறைகளை உடைத்துத் துண்டுகளாக்கி மரப்பெட்டிகளில் அடைத்து விற்பனைக்கு அனுப்பும் வேலையைச் செய்ய, பஞ்சத்துக்காக ஊரைவிட்டு வந்த தலித் தொழிலாளிகள் ஈடுபடுத்தப்பட்டார்கள். எந்த விதமான பாதுகாப்புக்கருவிகளும் அவர்களிடம் இல்லை. சாதாரண கடப்பாறைகளாலும் மண்வெட்டியாலும் வெட்டியெடுத்துத் துண்டுகளாக்கினார்கள். மரணத்துக்கான நாட்கள் நெருங்கிக்கொண்டிருந்த அத்தருணத்தில் அவர்களிடயே அசாதாரணமான ஓர் எழுச்சி உருவானது. முதல் உரிமைக்குரல் அந்தத் தொழிலாளர்களிடையே எழுந்தது. தமக்குக் கிடைத்த சிறு தகவலை ஆதாரமாகக் கொண்டு 1878 ஆம் ஆண்டையே மறு உருவாக்கம் செய்து காட்டியிருக்கிறார் ஜெயமோகன். ஒருபக்கம் மக்களெல்லாம் வெளியேறுவதற்குக் காரணமான தாதுவருஷப் பஞ்சத்தையும் இன்னொரு பக்கம் ஐஸ் ஹவுஸ் சம்பவத்தையும் இணைத்து நெய்து, ஒரு வரலாற்று நாவலை எழுதியிருக்கிறார்.
தமிழ்மண்ணில் நிகழ்ந்த இந்த வரலாற்றுத் தருணத்தை, பல்வேறு வரலாற்றுத் தருணங்களின் தொடர்ச்சியாக கட்டமைத்திருக்கும் ஜெயமோகனின் கலைநுட்பம் பாராட்டுக்குரியது. இச்சமூகம் காலம் காலமாக மூடிவைத்திருந்த இரட்டைவேடத்தை இந்த நாவல் கலைத்து, அம்பலப்படுத்திவிடுகிறது.
ஒரு காலத்தில் உலகத்தையே கொள்ளையடித்துக் கொழுத்திருந்தது பிரிட்டிஷ் பேரரசு. தன் அருகிலிருந்த அயர்லாந்து  மண்ணையும் அது விட்டுவைத்ததில்லை. எய்டன் அங்கே பிறந்தவன். மாபெரும் உணர்ச்சிக்கவிஞனான ஷெல்லியின் வரிகளை மனத்தில் ஏந்தி வளர்ந்தவன் அவன். தன்னைச் சுற்றியும் மலர்ந்துவிட்ட புரட்சிகரச் சமூகங்களைப்பற்றித் தெரிந்துகொண்டவன். எல்லாவற்றுக்கும் மேலாக மனசாட்சி உள்ளவன். அப்படிப்பட்டவனுக்கு பிரிட்டிஷ் நிர்வாகத்தின் ஆளாக இந்தியமண்ணில் காலடி எடுத்துவைக்கும் வாய்ப்பு கிடைக்கிறது. அவன் பொறுப்பேற்றுக்கொண்ட காலகட்டத்தில் ஐஸ் ஹவுஸ் சம்பவம் நிகழ்வதுபோல, புனைந்து செல்கிறார் ஜெயமோகன். ரட்சிக்கும் கடமை அதிகாரத்துக்கு உள்ள தலையாய கடமை என நம்பிச் செயலாற்றும் அவனை, நிர்வாகமும் நிர்வாகத்தின் அச்சுகளாக உள்ள சுயநல மனிதர்களும் செயல்படவிடாமல் தடுப்பதில் வெற்றி காண்கிறார்கள். நிர்வாகத்தின் மனசாட்சியைத் தூண்டி, ஆபத்தில் உள்ள மனிதர்களைக் காப்பாற்றுவதற்கான வாய்ப்புகளை உருவாக்குவதற்காக, பஞ்சத்தை நேருக்குநேராகக் கண்டு இரவெல்லாம் கண்விழித்து அவன் எழுதிக் கொடுத்த குறிப்புகள், அவன் எதிர்பார்த்த ஒரு பயனையும் அளிக்கவில்லை. மாறாக, தந்திர மனம் கொண்ட நிர்வாகம் பாதிக்கப்பட்டவர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்குவதற்காக நகரைச் சுற்றி கால்வாய்களையும் கட்டடங்களையும் உருவாக்கத் தேவையான அனுமதியைப் பெறுவதற்கு அக்குறிப்புகளைப் பயன்படுத்திக் கொள்கிறது. அந்தத் திட்டத்தில் கைமாறப் போகிற தொகையைப் பற்றிய கனவுகளில் திளைக்கத் தொடங்கிவிடுகிறது.
பாதிக்கப்பட்ட தொழிலாளிகள்பற்றிய விவரங்களைத் தெரிந்துகொள்வதற்காக புறநகரில் உள்ள சேரிக்கும், பஞ்சத்தைப்பற்றிய விவரங்களைத் தெரிந்துகொள்வதற்காக செங்கல்பட்டுக்கும் எய்டன் பயணம் செய்யும் காட்சிகள் முக்கியமானவை. மோசமான நிலையில் உள்ள குடிசைகளையும் அவர்களுடைய வறுமையான சூழலையும் சாலையோரங்களில் விலங்குகள்போலச் செத்துக்கொண்டிருக்கும் மக்களின் கோரமான குரல்களையும் எய்டனின் கண்கள் வழியாக நம்மைப் பார்க்கவும் உணரவும் செய்கிறார். உயிர்ப்புத்தன்மை மிகுந்த ஜெயமோகனின் சித்தரிப்புமொழி அக்காட்சிகளை ஓவியங்களாகத் தீட்டியிருக்கின்றன. தொர தொர என்று குரலெழுப்பியபடி கைநீட்டும் கரிய உருவம். உட்குழிந்த கண்களால் வெறித்துப் பார்த்தபடி இறுதிமூச்சை விடும் எலும்பும் தோலுமான உருவம். குழந்தையின் பிணத்தை இழுத்துக் குதறித் தின்னும் நாய்களின் கூட்டம். வீசப்படும் ஒரு ரொட்டித்துண்டை எடுக்க கூட்டம்கூட்டமாக முட்டிமோதி ஒருவரையொருவர் கடித்துக்கொள்ளும் மனிதர்கள். ஒவ்வொரு காட்சியும் ஓர் ஓவியமாக  எழுத்தில் உறைந்துவிடுகிறது.
எய்டன் இரண்டு முக்கியமான பாத்திரங்களோடு இந்த நாவலில் உரையாடும் சூழல் அமைக்கப்பட்டுள்ளது. ஒன்று காத்தவராயனின் பாத்திரம். இன்னொன்று முரஹரி ஐயங்காரின் பாத்திரம். ஒன்று தாழ்த்தப்பட்ட சாதியின் குரலாக துணைநிற்கும் பாத்திரம். இன்னொன்று, சாதியமைப்பில் மட்டுமன்றி, ஆட்சியமைப்பிலும் முக்கியமான எல்லா லாபங்களையும் ஈட்டிக்கொண்ட உயர்சாதியின் குரலாக துணைநிற்கும் பாத்திரம். காத்தவராயனின் குரல் மனசாட்சி உள்ள எய்டனிடம் மட்டுமே எடுபடுகிறது. முரஹரி ஐயங்காரின் குரல் ஐஸ் ஹவுஸ் நிர்வாகம், ஆட்சி நிர்வாகம் என எல்லா இடங்களிலும் எடுபடுகிறது. பஞ்சங்களால் கூட்டம்கூட்டமாக செத்துவிழும் மனிதர்களைப்பற்றிச் சொல்லும்போது, அவர்களுடைய முற்பிறப்புகளில் செய்த பாவங்களுக்கு கடவுள் வழங்கிய தண்டனையே அந்த மரணம் என கொஞ்சம்கூட மனசாட்சியே இல்லாமல் அவரால் சொல்லமுடிகிறது. குதிரைவீரர்கள் தலித் தொழிலாளர்களிடையே எதிர்பாராத கணத்தில் புகுந்து தாக்கி விரட்டி வீழ்த்தும் காட்சியை, சிறிதளவும் குற்ற உணர்ச்சியே இல்லாமல் ஒரு கூட்டுப்புணர்ச்சிக் காட்சியைக் காணும் உவகையோடு கண்டு களிக்கிறார். அவருடைய பாவபுண்ணிய வாதத்தை அடிப்படையாகக் கொண்டு யோசித்துப் பார்த்தால், அவர் கண்குளிரக் கண்டு ஆனந்தப்படும் அக்காட்சி, அவர் தன் முற்பிறவியில் செய்த புண்ணியத்துக்கு கடவுள் அருளிய விருது என அவர் நினைப்பதாகத் தோன்றுகிறது. தலித் மக்கள் சகமனிதர்களாலும் கைவிடப்பட்டவர்கள். கடவுளாலும் கைவிடப்பட்டவர்கள்.
ஐஸ் ஹவுஸ்  போராட்டக் காலத்தின் அசல்தன்மையை, மனம் ஒப்பும் விதத்தில் எழுத்தில் வடித்துள்ள ஜெயமோகன் பாராட்டுக்குரியவர். அவர் புனைந்திருக்கும் ஒவ்வொரு பாத்திரமும் முக்கியமானதாக உள்ளது. அதன் நம்பகத்தன்மை கேள்விக்கு அப்பாற்பட்டதாகவே அமைந்திருக்கிறது. ஆதம் ஆண்ட்ரூ மனத்தைத் தொட்டுவிடும் முக்கியமான ஒரு பாத்திரம். உயர்ந்த வேலையில் அமர்வதற்காக கல்கத்தாவுக்குச் செல்லவேண்டியவன் விதிவசத்தால் செங்கல்பட்டுக்கு வந்து சேர்கிறான். தான் ஊழியம் செய்யவேண்டிய இடம், மரணங்கள் மண்டிய அந்த இடம்தான் என உறுதியோடு சொல்லி இறங்கிச் செல்கிறான். வேலையமர்த்தலாணைக் கடிதத்தை அவன் கைகள் காற்றில் வீசி எறிகின்றன. அவன் கால்கள் கதறியழும் அந்த மக்களை நோக்கி நடக்கின்றன. மக்களின் மரணங்களை ஒரு புள்ளிவிவரமாக மாற்றி பதிவேட்டில் குறித்துக்கொண்டு அறிக்கை தயாரித்து அளிக்கும் அதிகாரவர்க்கத்தைச் சேர்ந்தவனாக இருந்தாலும் அவனுக்குள் இயங்கும் மனசாட்சி, அவனை இறைநிலைக்கு உயர்த்திவிடுகிறது. மனத்தைவிட்டு நீங்காத மற்றொரு பாத்திரம் மரிஸா. ஆங்கில இந்திய இளம்பெண். பாதிரியாரின் ஆதரவால் ஆங்கிலம் கற்றவள். சொந்த ஆர்வத்தின் காரணமாக இலக்கியமும் கற்றவள். அதிகாரிகளின் களைப்பை நீக்கி இரவுத்துணையாக வாழ்ந்து பிழைப்பவள் என்றாலும் அவளுக்குள் பொங்கிப் பீறிடும் தன்மான உணர்ச்சி அவளை மிக உயர்ந்த அன்னையாக மாற்றிவிடுகிறது.  ஆண்ட்ரூ, மரிஸா போன்ற கற்பனைப்பாத்திரங்களூடே, உண்மைப்பாத்திரத்தின் சாயலுடைய காத்தவராயனும் இடம்பெற்றிருக்கிறான். மாபெரும் தலித் சிந்தனையாளராக பிற்காலத்தில் மலர்ந்த அயோத்திதாசரின் இளமைப்பருவத் தோற்றத்தோடு அவன் காணப்படுகிறான். எதார்த்தத்தை அவன் விளங்கிக்கொள்ளும் விதத்திலும் எய்டனுக்கு விளக்கிச் சொல்லும் விதத்திலும் பக்குவமும் மேதைமையும் ஒருங்கே தென்படுகிறது. தன் குலச்சின்னத்தை அவன் துறப்பதற்கான மனநிலையை, ஐஸ் ஹவுஸ் மரணங்கள் உருவாக்கியதாகப் புனைந்துள்ள தருணம் பொருத்தமாக உள்ளது.  வரலாற்றில் மனமாற்றத்துக்கான தருணங்கள் எப்போதும் இப்படிப்பட்ட மரணத்தருணமாகவே உள்ளது. பிணங்கள் புரண்டுகிடக்கும் போர்க்களத்தைக் கண்டு மனம் மாறும் அசோக சக்கரவர்த்தி பெளத்த தர்மத்தைப் பின்பற்றத் தொடங்கியதை யாராலும் மறக்கமுடியாது. காத்தவராயனும் ஐஸ் ஹவுஸ் மரணங்களை அடுத்து, பெளத்த தர்மத்தை ஏற்றுக்கொள்பவனாக மாறுகிறான். ஆனால், அது அசோகன் நினைத்ததுபோல அஹிம்சையையும் அமைதியையும் வேண்டியதாக அல்லாமல், சாதிநிலைகளின் இரக்கமற்ற தன்மையைச் சகித்துக்கொள்ளமுடியாமல், சாதிகள் அல்லாத ஓர் உலகத்தின் பிரஜையாக தன்னை மாற்றிக்கொள்ளவேண்டும் என்கிற ஆவலின் காரணமாக மாறுகிறான். குதிரைவண்டியோட்டி, காவல்காரன், ஐஸ் ஹவுஸ் மேற்பார்வையாளன் எல்லோருமே அரசு நிர்வாகத்தை அண்டிப் பிழைப்பவர்கள். அவர்களுக்குள் இயங்கும் சாதியுணர்வு மூச்சுக்காற்றுபோல இயங்கிக்கொண்டே  இருக்கிறது. 1878 காலகட்டத்துச் சூழலை கண்முன்னால் நிகழ்த்திக்காட்ட, பரிவேதுமில்லாத இரும்புமனம் கொண்ட அத்தகு பாத்திரங்கள் பலர் நாவலில் இடம்பெற்றுள்ளார்கள்.
கைவிடப்பட்ட கூட்டதினரிடையே பரிவோடு நடந்துசெல்ல ஆண்ட்ரூ போல எய்டனால் இயலவில்லை. தன் முயற்சிகள் தோல்வியுற்றதைத் தாங்கிக்கொள்ள இயலாமலும் தன் மனசாட்சிப்படி நடக்க இயலாத சுயவெறுப்பிலும் அவன் தற்கொலையை நாடுகிறான். உயிர்பிழைத்து எழுந்த பிறகு, நிர்வாக வசதிக்காக அவன் இடமாற்ற ஆணையை ஏற்று தென்காசிக்குச் செல்லவேண்டியிருக்கிறது. அங்கு நடைபெறும் இரவுவிருந்து நிகழ்ச்சி ஒரு முக்கியமான காட்சி. ஆளும் வர்க்கத்தாரின் மனநிலைகளையும் சுயநலப் போக்குகளையும் நேர்த்தியான உரையாடல் காட்சிவழியாக உணர்ந்துகொள்ளும்படி செய்திருக்கிறார் ஜெயமோகன். அங்கு நடைபெறும் மதுவிருந்தில் கோப்பைகளில் நிரப்பப்படுகிற மதுவில் பனிக்கட்டித் துண்டுகள்  கலக்கப்படுகின்றன. தன்னைநோக்கி நீளும் கோப்பையை வாங்கி ஒரே மூச்சில் அருந்தும் நிலைக்கு ஆளாகிறான் எய்டன்.
மனசாட்சியில்லாத சொந்த சமூகம் தமக்காக உழைக்கும் மக்களை மனிதர்களாகவே கருதாமல் சாதி என்னும் பெயரால் ஒதுக்கி நசுக்கி வீழ்த்துகிறது. ஆட்சி செய்யவந்த அயல் இன அதிகார வர்க்கமோ, சுயநலத்துக்காக அவர்களை சுத்தமாக கைவிட்டுவிடுகிறது. நாவலைப் பிரித்துப் படிக்கும் ஒவ்வொருமுறையும் அவமான உணர்ச்சியும் குற்ற உணர்ச்சியும் பொங்கியெழுவதைத் தடுக்கமுடியவில்லை.

http://puthu.thinnai.com/?p=26047